TamilsGuide

பொலிஸ்மா அதிபர் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவேண்டும் – ஜனாதிபதி வலியுறுத்து

சபாநாயகர் மற்றும் பிரதம நீதியரசர் ஆகியோருக்கிடையில் பேச்சுவார்த்தைளை முன்னெடுத்து, இவ் வாரத்துக்குள் பொலிஸ்மா அதிபர் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஹோமாகம பகுதியில் இன்று(28) இடம்பெற்ற வெல்வோம் ஸ்ரீலங்கா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, செப்டெம்பர் 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இயலுமான வகையில், ஒத்துழைப்பு வழங்கி செயற்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபர் நியமனம் தவறு என கூறி உயர்நீதிமன்றில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்ததாகவும், அரசியலமைப்பின் பிரகாரம் இந்த நியமனம் தவறு என கூறியே வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயர்நீதிமன்றத்தினால் பொலிஸ் மா அதிபருக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பொலிஸ் மா அதிபர் தொடர்பாக ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை தொடர்பாக சபாநாயகர் மற்றும் பிரதமர நீதியரசர் கலந்துரையாடி தீர்வுகாண வேண்டும் என வலியுத்தியுள்ளார்.

மேலும், தேர்தல் நாட்டு மக்களின் அடிப்படை உரிமை எனவும், நாட்டில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் நடத்தப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அத்துடன், தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு நாம் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும், பொலிஸ் திணைக்களத்தின் ஒத்துழைப்பு வழங்க தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு தற்போதைய சந்தர்ப்பத்தில் மிகவும் அவசியமாகும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் மா அதிபரின் ஊடாகவே அதற்கான ஒத்துழைப்பு பெறப்பட வேண்டும் என தெரிவித்த ஜனாதிபதி, இந்த வாரத்திற்குள் பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தேர்தல் பிற்போடப்படுவதற்கு நான் உடந்ததையல்ல எனவும், செப்டெம்பர் 21 ஆம் திகதி திட்டமிட்டவாறு தேர்தல் இடம்பெறும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a comment

Comment