TamilsGuide

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவம் – கொடிச்சீலை வழங்கும் நிகழ்வு

கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் கொடிச்சீலை கொண்டுவரும் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது.

இராம பிரானால் வழிபடப்பட்ட ஆலயம் என்ற பெருமையினையும், மூர்த்தி,தலம்,தீர்த்தம் என்பவற்றை ஓருங்கே கொண்ட ஆலயம் என்ற பெருமையினையும் கொண்ட மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தினை முன்னிட்டு கொடிச்சீலை கொண்டுவரும் நிகழ்வு நேற்று (வியாழக்கிழமை) மாலை நடைபெற்றது.

மட்டக்களப்பு நகரில் உள்ள வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து கொடிச்சீலை கொண்டுவரும் நிகழ்வு நடைபெற்றது.

வீரகத்திப்பிள்ளையார் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ முரசொலிமாறன் குருக்களினால் விசேட பூஜைகள் நடாத்தப்பட்டு கொடி மாமாங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினரிடம் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு நகரின் பிரதான வீதியுடாக கொடிச்சீலை ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு பார் வீதியினூடாக ஆலயத்தினை வந்தடைந்தது.

நாளை நண்பகல் 12.00மணியளவில் கொடியேற்றம் நடைபெறவுள்ளதுடன், வருடாந்த மஹோற்சவத்தில் எதிர்வரும் 03ஆம் திகதி சனிக்கிழமை ஆலயத்தின் சித்திரத்தேர் உற்சவமும் 04ஆம் திகதி பிதிர்க்கடன் தீர்க்கும் தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளது.

இம்முறை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருடாந்த மஹோற்சவத்தில் கலந்துகொள்வார்கள் என்ற அடிப்படையில் விசேட போக்குவரத்து ஒழுங்குகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
 

Leave a comment

Comment