TamilsGuide

பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு இழப்பீடு வேண்டும் – சஜித் கோாிக்கை

தகனமா, அடக்கமா என்ற விவகாரத்தில் மன்னிப்புக் கேட்டு பிரச்சினையில் இருந்து தப்பி ஓட முயற்சிக்க வேண்டாம் எனவும் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு அரசாங்கம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் விசேட கூற்று ஒன்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா காலப்பகுதியில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட கட்டாய தகனக் கொள்கைக்கு மன்னிப்பு கேட்பதென்பது ஒரு சிறந்த விடயம் எனவும் இந்த தீர்மானத்திற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அமைச்சரவையில் அங்கம் வகித்த அமைச்சர்கள் ஆதரவளித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இதன் மூலம் முஸ்லிம் மக்களின் சமய, கலாசார உரிமைகள் முற்றாக மீறப்பட்டதாகவும் நாட்டில் இனவாதமும் மதவாதமும் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டள்ளார்.

முஸ்லிம்களை இலக்கு வைத்து அடக்கமா தகனமா என்ற தீர்மானம் எந்த நபரின் அறிக்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்டது? இது தொடர்பாக ஆலோசனை வழங்கியது யார்? இந்த ஆலோசனை தொடர்பாக அரசியல் தலைமைகள் பரிசீலித்து ஆராய்ந்து பார்க்காததன் காரணம் என்ன போன்ற விடயங்களையும முன்வைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆலோசனைகளை கைவிட்டு, முஸ்லிம் மக்களுக்கு எதிராக இவ்வாறான குற்றச் செயலைச் செய்ய தவறான தீர்மானங்களை எடுத்தவர்களைக் வெளிப்படுத்தி, தகனமா அடக்கமா விவகாரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால், முஸ்லிம் மக்களிடம் மன்னிப்புக் கேட்டு பிரச்சினையில் இருந்து தப்பி ஓட முயற்சிக்க வேண்டாம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment