TamilsGuide

ஒலிம்பிக்கில் பங்கேற்க இஸ்ரேல் வீரர்களுக்கு தடையா? - விளக்கம் அளித்த ஐ.ஓ.சி.

பாரிசில் ஒலிம்பிக் போட்டிகள் நாளை மறுதினம் முதல் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டியில் டேக்வாண்டோ தடகள வீரர் அவிஷாக் செம்பெர்க், ஜிம்னாஸ்டிக் வீரர் ஆர்டெம் டோல்கோபியாட் மற்றும் லானிர் உள்ளிட்ட பல்வேறு இஸ்ரேலிய வீரர் போட்டியில் உள்ளனர்.

இதேபோல, பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 8 பாலஸ்தீன விளையாட்டு வீரர்களும் பங்கேற்கின்றனர்.

இதற்கிடையே, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவருக்கு இஸ்ரேலை தடை செய்யக் கோரி பாலஸ்தீன ஒலிம்பிக் கமிட்டி கடிதம் அனுப்பியது. பாலஸ்தீனப் பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்திருப்பது சட்டவிரோதமானது என ஐ.நா.சபையின் உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய கருத்தையும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், பாலஸ்தீனிய ஒலிம்பிக் குழுவின் கோரிக்கையை சர்வதேச ஒலிம்பிக் சங்கம் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் ஆகியோர் நிராகரித்துள்ளனர்.

இதுதொடர்பாக, சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் தாமஸ் பாக் கூறுகையில், ஐ.ஓ.சி.யின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது. எங்களிடம் இரண்டு தேசிய ஒலிம்பிக் கமிட்டிகள் உள்ளன. அதுவே அரசியல் உலகத்துடனான வித்தியாசம். இந்த வகையில் இருவரும் அமைதியான சக வாழ்வில் வாழ்ந்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

மேலும், பாலஸ்தீனம் ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகரிக்கப்பட்ட உறுப்பு நாடு அல்ல. ஆனால் பாலஸ்தீன ஒலிம்பிக் கமிட்டி என்பது அங்கீகரிக்கப்பட்ட தேசிய ஒலிம்பிக் கமிட்டியாகும். மற்ற அனைத்து ஒலிம்பிக் கமிட்டிகளைப் போலவே சம உரிமைகளையும் வாய்ப்புகளையும் அனுபவிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a comment

Comment