TamilsGuide

5,000 ரூபாவைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும்

”பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பான நீதிமன்ற வழக்கில் தீர்வு கிடைக்கும் வரை இடைக்கால கொடுப்பனவாக 5,000 ரூபாவை  வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  நடவடிக்கை எடுக்க வேண்டும்” என  நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  வேலுசாமி இராதாகிருஸ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர்  மேலும் கருத்துத் தெரிவிக்கையில், பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக  நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட  இடைக்காலத்  தடை உத்தரவு காரணமாக  எமது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெருந்தோட்ட கம்பனிகள், நீதிமன்ற தடை உத்தரவைக்  காரணம் காட்டி சம்பள உயர்வை வழங்க மறுத்து வருகின்றன. இதன் காரணமாக தொழிலாளர்கள் பெரும் பொருளாதார ரீதியான பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

எனவே அவர்களுடைய விடயத்தில் அரசாங்கம் மனிதாபிமான ரீதியாகச்  சிந்தித்து செயற்பட வேண்டும்.

எங்களுடைய தொழிலாளர்களின் வருமானத்தின் மூலமாக ஈரான் நாட்டினுடைய ஒரு தொகுதி கடனை அரசாங்கம் செலுத்தியுள்ளது.

ஆனால் அரசாங்கம் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் கண்ணாம் பூச்சி ஆட்டம் ஆடி வருகின்றது.

வர்த்தமாணி அறிவித்தல் ஜனாதிபதியின் பரிந்துரை என பல விளையாட்டுகள் நடைபெறுகின்றன.ஆனால் சம்பள உயர்வு வழங்கப்படவில்லை.

நீதிமன்றம் இடைக்கால் தடை உத்தரவை வழங்கியுள்ளது. எனவே, அரசாங்கம் நீதிமன்றத்தின் வழக்கு தீர்ப்பு கிடைக்கின்ற வரையில் தொழிலாளர்களுக்கான இடைக்கால கொடுப்பனவாக 5,000 ரூபாவை வழங்க முன்வர வேண்டும். இதனை தேர்தல் காலத்தில் மாத்திரம் வழங்கிவிட்டு நிறுத்திவிடாமல் வழக்கு நிறைவடைகின்ற வரையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு இராதாகிருஸ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 

Leave a comment

Comment