TamilsGuide

அஸ்வெசும நலன்புரித் திட்டம் தொடர்பான முக்கியத் தகவல்

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான கணக்கெடுப்பை எதிர்வரும் 31 ஆம் திகதிக்குள் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளதாக  நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே  அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” முதற்கட்டமாக இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கத் தவறிய குடும்பங்களுக்கான சந்தர்ப்பத்தை ஏற்கனவே வழங்கியிருந்தோம்.

இதில் சுமார் 4 இலட்சத்து 54 ஆயிரத்து 924 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றன. நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் இருந்து மாவட்ட மட்டத்தில் அதிகளவான விண்ணப்பங்கள் கிடைக்கபெற்றுள்ளன.

ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவிற்கும் கணக்கெடுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கணக்கெடுப்பு அலுவலரால் தகவல் கட்டமைக்கப்பட்ட பின்னர்,
அனைத்து பிரதேச செயலாளர்களும் கிராம உத்தியோகத்தர் பிரிவு ரீதியில் விண்ணப்பதாரர்களின் முழுமையான விவரங்களை கண்காணிக்க முடியும்.

கணக்கெடுப்பின் முடிவில், அந்தந்த குடும்பங்களின் தகவல்கள் தேர்வுக் குழுக்களால் கண்காணிக்கப்படுகின்றன. தேர்வுக் குழுக்கள் கணக்கெடுத்த, குடும்பத்தின் தகவலைக் கண்காணித்து, தெரிவு அளவுகோல்களின் கணக்கீட்டை அங்கீகரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படும்.

இவ்வாறு, தெரிவு அளவுகோல்கள் கணக்கிடப்பட்ட பின்னர், வறுமையைக் கணக்கிடுவதற்கு ஒரு மதிப்பெண் வழங்கப்படுகிறது. இந்த நலன்களுக்கு விண்ணப்பிக்கும் போது
எப்போதும் மிகச்சரியான தகவல்களை வழங்குமாறும் நாம் கோரிக்கை விடுக்கின்றோம்” இவ்வாறு ஜயந்த விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment