TamilsGuide

அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு ஆதரவாக தொழிலாளர்கள் பணிப்புறக்கணிப்பு

நுவரெலியா மாவட்டத்தில் இயங்கும் களனிவெளி பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்திற்குரிய அனைத்து பெருந்தோட்டங்களிலும் தொழிலாளர்கள் தமது வழமையான தொழிலை ஸ்தம்பிதப்படுத்தி இன்று காலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்

இரண்டு முக்கிய காரணங்களை முன் வைத்து இந்தப் பணிப்புறக்கணிப்பில் இவர்கள் களமிறங்கியுள்ளதா தெரிவிக்கப்பட்டுள்ளது

1700 ரூபா சம்பளத்தை தர மறுக்கும் களனிவெளி கம்பனித் தொழிலாளர்கள் வயிற்றில் அடித்து அடாவடிப் போக்கை கடைப்பிடிப்பதாகவும், இத்தகைய அடாவடிப் போக்கை கண்டித்து அமைச்சர் ஜீவன் தொண்டமான் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுத்து அவரை கைதுசெய்ய இந்தக் கம்பனி நடவடிக்கை எடுத்ததைக் கண்டித்தும் இந்தப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்

அந்த வகையில் களனிவெளி பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தின் கீழ் இயங்கும் நுவரெலியா பீட்று தோட்டத்திற்கு கீழ் இயங்கும் பீட்று, லவர்சிலீப், நேஸ்பி, மூன்பிளேன், மாகாஸ்தோட்ட, ஸ்கிராப் ஆகிய தோட்டங்களுடன் ஒலிபண்ட் மற்றும் நுவரெலியா டிவிஷன் ஆகிய தோட்டங்களிலும் தொழிலாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல் நானுஓயா பிரதேசத்தில் களனிவெளி பெருந்தோட்ட முகாமைத்துவ நிர்வாகத்தின் கீழ் இயங்கும் எடின்புரோ, கிளாசோ, ஆடிவன், மற்றும் கிளாஸோ மேல் பிரிவு கீழ்ப்பிரிவு ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் மற்றும் உடரதல்ல மேல் மற்றும் கீழ்ப்பிரிவு தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் பணிப்பறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment