TamilsGuide

மனைவி கண்முன் சுட்டுக் கொல்லப்பட்ட கணவன், லாரி டிரைவர் வெறிச்செயல் - நீதி கேட்கும் குடும்பம்

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்தவர் கவின் தசூர். இவருக்கு வயது 29. கவின் 2016 முதல் அமெரிக்காவில் வசித்து வந்தார். 2018 இல் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்த பிறகு, சொந்தமாக டிராவல்ஸ் நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.

இதனிடையே, மெக்சிகன் வம்சாவளியைச் சேர்ந்த சிந்தியா என்ற பெண்ணை கடந்த ஜூன் மாதம் 29-ந்தேதி திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், திருமணம் ஆகி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், கவின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 16-ந்தேதி குடும்பத்துடன் வெளியே சென்றிருந்த கவின், மீண்டும் வீட்டுக்கு தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, முந்தி செல்வது தொடர்பாக லாரி டிரைவருக்கும், கவினுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது லாரி டிரைவர், கவின் மீது அவரது மனைவி கண்முன்னே துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதில் கவின் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, போலீசார் விசாரணை குறித்து குற்றம்சாட்டிய குடும்பத்தினர், லாரி டிரைவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றும் கவினுக்கு நீதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே, ஜூலை 29 ஆம் தேதி கவின் இந்தியா திரும்புவார் என்று குடும்பத்தினர் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், இப்போது அவரது தாயார் கவினின் சாம்பலை எடுத்துக்கொண்டு ஆக்ராவுக்குத் திரும்புவார் என்று குடும்பத்தினர் கண்ணீருடன் தெரிவித்தனர்.
 

Leave a comment

Comment