TamilsGuide

கடலுக்கு செல்ல வேண்டாம் – காலநிலை அவதானம்

தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக  நாட்டில் நிலவும்  காற்று நிலைமை மேலும் தொடரும் என  வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை எதிர்வரும் சில நாட்களில் குறைவடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது

இதன்படி  மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசக் கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

கொழும்பிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதேவேளை திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கல்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

எனவே கடற்றொழிலில்  ஈடுபடுவோர் மற்றும்  மீனவ சமூகத்தினர் அவதானமாக செயற்படுமாறு  அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

அரபிக் கடலில் நிலவும் பலத்த காற்றுடனான வானிலை காரணமாக மறு அறிவித்தல் வரை செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் கடற்றொழிலாளர்களை அறிவுறுத்தியுள்ளது.
 

Leave a comment

Comment