TamilsGuide

ஜனாதிபதியின் திட்டங்கள் வித்தியாசமானவை – செந்தில் தொண்டமான்

கடந்த 15வருடமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான அரசியலை முன்னெடுத்தபோது இருந்ததை காட்டிலும், கடந்த ஒன்றரை வருடத்தில் அவருடன் இணைந்து பணியாற்றியபோது அவரது திட்டங்களும் செயற்பாடுகளும் வித்தியாசமானதாக இருப்பதாக கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

அண்மையில் மலேசியா சென்றபோது இந்த நாடு பொருளாதார ரீதியிலிருந்து குறுகிய காலத்தில் மீட்சிபெற்றது குறித்து அந்த நாட்டு அரசியல்வாதிகள் வியப்பினை வெளியிட்டதாகவும் அதற்காக காரணம் இந்த நாட்டினை தலைமையேற்று நடாத்திய ஜனாதிபதியின் செயற்பாடுகள் எனவும் அவர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே.மணிவண்ணன் தலைமையில் உள்ளுராட்சிமன்றங்களில் தற்காலிக சேவையாற்றிவரும் ஊழியர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இதன்போது மட்டக்களப்பு மாநகரசபை மற்றும் நகரசபைகள்,பிரதேசசபைகளில் கடமையாற்றும் அனைத்து வகையான தற்காலிக ஊழியர்கள் என 483பேருக்கு நிரந்தர நியமனக்கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் கிழக்க்கு மாகாண பிரதம செயலாளர், இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் பிரத்தியேக செயலாளர் த.ரொஸ்மன், இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனின் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் செயலாளர் தஜிவரன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment