TamilsGuide

மூத்த எழுத்தாளர் கோப்பாய் கே.வி. குணசேகரம் காலமானார்

கோப்பாய் நாவலர் தமிழ் வித்தியாலயத்தின் முன்னாள் அதிபரும் நல்லூர் கல்விக் கோட்டத்தின் முன்னாள் பணிப்பாளரும் தமிழ் எழுத்தாளருமாகிய கே. வி. குணசேகரம் 15.07.2024 தனது 74 ஆவது வயதில் காலமானார்.

சிறுகதைகள், நாவல்கள் கட்டுரைகள் எனப் பலவற்றை எழுதிக்குவித்தவர் அவர். நூற்றுக்கணக்கான நூல்களை வெளியீடு செய்தார். தனக்கென ஓர் இணையத்தளத்தை உருவாக்கி அவற்றில் தனது ஆக்கங்களைப் பிரசுரித்திருந்தார்.

 திருக்குறள் பாக்களுக்கு எளிமையாக விளக்கம் வழங்கும் முயற்சியாக சிறுசிறு கதைகளை எழுதியிருந்தார். இவ்வாறு 1330 குறட்பாக்களுக்கும் கதை எழுதி திருக்குறட் கதைகள் எனப் பிரசுரித்திருந்தார். கெப்பிட்டல் தனியார் தொலைக்காட்சியில் அந்தக் கதைகளைத் தானே திரையில் தோன்றி சொல்லியும் இருந்தார்.

தனது எழுத்துகளுக்கு இலக்கிய உலகோர் போதிய அங்கீகாரத்தைத் வழங்கவில்லை என்ற ஆதங்கமும் அவரிடம் காணப்பட்டது.

வலிகாமம் கிழக்கு பண்பாட்டுப் பேரவையின் உபதலைவராக ஒரு தடவை செயற்பட்டிருந்தார்.

பழகுவதற்கு இனியவர். எளிமையாக வாழ்ந்தவர். எழுத்தே தனது சுவாசம் எனக் கருதிச் செசயற்பட்டவர்.

அன்னாரது இறுதிக் கிரியைகள் கோப்பாய் வெள்ளெருவைப் பிள்ளையார் கோவிலுக்கு அருகில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் எனக் கூறுகின்றனர். (எப்போது என்பதை அறிய முடியவில்லை)

அன்னாரின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம்.

Leave a comment

Comment