TamilsGuide

நிதியமைச்சின் அதிகாரிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைப்பு

ஜனாதிபதி தேர்தலுக்கான நிதி விடுவிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரினால் நிதியமைச்சின் அதிகாரிகளுக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 17 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இதனிடையே 2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலின் பிரதி அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ளது.

இதேவேளை ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக சட்டத்தரணி அருண லக்சிறி தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மனு மூவரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் நாளைய தினம் பரிசீலனைக்கு எடுததுக்கொள்ளப்படவுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலை இடைநிறுத்த உத்தரவிடுமாறு கோரியும் 19 ஆவது திருத்தத்தை முறையாக நிறைவேற்றுவதற்கு பொதுவாக்கெடுப்பு நடத்துமாறும் கோரியும் சட்டத்தரணி அருண லக்சிறி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

சட்டத்தரணி அருண லக்சிறி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மனுவில், தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள், நாடாளுமன்ற பொதுச் செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் ஊடாக, ஒரு வருடத்திற்கு பின்னர் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றத்தை கலைக்கும் ஜனாதிபதியின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் அரசியலமைப்பின் 70 ஆவது சரத்து திருத்தப்பட்டுள்ளதாக மனுதாரர் கோரியுள்ளார்.

இந்த திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு மூலம் அங்கீகாரம் கிடைத்துள்ளதாலும் ஜனாதிபதி கையொப்பமிடாதமையால் இந்த திருத்தத்தை சட்டமாக கருத முடியாது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் 19 ஆவது திருத்தச் சட்டத்தை தொடர்ந்தும் சட்டமாக ஏற்றுக்கொள்வது தவறானது என மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 

Leave a comment

Comment