TamilsGuide

எந்த அணியில் போட்டியிடுவது என ரணில் விக்கிரமசிங்கவிற்கு குழம்பம் – இராதாகிருஷ்ணன்

ஜனாதிபதித் தேர்தலில் எந்த அணியில் போட்டியிடுவது என ரணில் விக்கிரமசிங்க குழம்பியுள்ளார் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு மலையக மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் பதுளையில் இன்று நடைபெற்ற சந்திப்பின் பிறகு ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தொிவித்துள்ளாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

”ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவித்தலை விடுப்பதற்குரிய அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிட்டுவதற்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ளன.

இந்நிலையில் தேர்தலை பிற்போடுவதற்கு சிலர் நீதிமன்றத்தை நாடுகின்றனர். 5 ஆண்டுகளா? 6 ஆண்டுகளா எனக்கோரி ஒருவர் நீதிமன்றத்தை நாடினார்.

அந்த மனு நிராகரிக்கப்பட்டது. 19 ஆவது திருத்தச்சட்டம் முறையாக நிறைவேற்றப்படவில்லை எனக்கூறி மற்றுமொருவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டலுடன்தான் 19 நிறைவேற்றப்பட்டது. எனவே இந்த விடயத்தில் சிக்கல் வராது.

எனவே ஒக்டோபர் மாதம் தேர்தல் நடைபெறுவது உறுதி. ஜனாதிபதித் தேர்தலுக்கென பாதீட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே நிதி இல்லை என காரணம் கூறவும் முடியாது.

ஐக்கிய தேசியக் கட்சியை இல்லாமல் ஆக்கிய சந்தா்ப்பத்தில் தனி ஒருவராக நாடாளுமன்றம் வந்து, ஜனாதிபதியாக தெரிவானமை ஜனாதிபதி ரணிலின் திறமை. ஆனால் ஜனாதிபதி தேர்தலில் எந்த அணியில் போட்டியிடுவது என குழம்பியுள்ளார்.

ஏனெனில் மக்கள் ஆணை அவருக்கு இல்லை” என நாடாளுமன்ற உறுப்பினா் வே. இராதாகிருஷ்ணன் மேலும் குறிப்பிட்டாா்.
 

Leave a comment

Comment