TamilsGuide

தென்கொரியாவில் நிலை நிறுத்தப்பட்ட அமெரிக்க நாசகார கப்பல்

அமெரிக்காவின்  யுஎஸ்எஸ் தியோடா் ரூஸ்வெல்ட் விமானம் தாங்கி போர்க்கப்பல் தென்கொரியாவில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

வடகொரியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே அண்மையில் இராணுவ ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், வடகொரியாவின் அண்டை நாடான தென்கொரியாவுக்கு அமெரிக்க போர்க்கப்பல் வந்துள்ளது.

இந்த நிலையில்,  அமெரிக்கா-தென் கொரியா-ஜப்பான் ஆகிய மூன்றுநாடுகள் இணைந்து தென்கொரிய கடல் பகுதியில் போர் பயிற்சியும் நடத்த இருக்கின்றன.

இது தொடா்பாக அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘பிராந்திய ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவது, பதற்றத்தைக் குறைப்பது, சரக்கு கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு அமெரிக்க விமானம் தாங்கி போர்க்கப்பல் தென்கொரியாவுக்கு சென்றுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த வாரம் ரஷிய அதிபா் புடின்-வடகொரிய அதிபா் கிம் ஜோங் உன் ஆகியோா் மிகப்பெரிய இராணுவ ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.

இது தென்கொரியாவுக்கு அச்சுறுத்தலாக அமைவதால், தங்கள் நாட்டில் உள்ள ரஷ்ய தூதரை அழைத்து தென்கொரியா கண்டனத்தைப் பதிவு செய்தது. மேலும், ரஷ்யாவுக்கு எதிராகப் போரிட்டு வரும் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கவும் தென்கொரியா முடிவு செய்தது.
 

Leave a comment

Comment