TamilsGuide

20 ஆண்டு வேலை இல்லாமல் சம்பளம் வழங்கிய நிறுவனத்தை எதிர்த்து வழக்கு தொடுத்த பெண்

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் லாரன்ஸ் வான் வாசென்ஹோவ் என்ற பெண்மணி. முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த 1993-ம் ஆண்டில் பிரான்ஸ் டெலிகாம் நிறுவனத்தில் (ஆரஞ்சு நிறுவனத்தால் கையகப்படுத்துவதற்கு முன்) பணியில் சேர்ந்தார்.

அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவருக்கு ஏற்ற பணிகளை நிறுவனம் வழங்கியது. அவர் 2002-ம் ஆண்டு வரை வேலை செய்தார்.

மற்றொரு பகுதிக்கு இடமாற்றம் செய்யவேண்டும் என 2002-ல் வான் வாசென்ஹோவ் கோரிக்கை விடுத்தார். ஆனால் புதிய சூழல் அவருக்கு ஏற்றதாக இல்லை. அவருக்கு ஏற்ற் வேலை சூழலை மாற்றி அமைக்க ஆரஞ்ச் நிறுவனம் மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

முழு சம்பளத்தையும் அவருக்கு தொடர்ந்து வழங்கிய ஆரஞ்ச் நிறுவனம், எந்த வேலையையும் வழங்கவில்லை என குற்றம் சாட்டுகிறார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், சஸ்பெண்ட் செய்யாமல் அவரை கம்பெனியில் இருந்து வெளியேற்றுவதற்கான திட்டமிட்ட நடவடிக்கை இது. 20 ஆண்டாக எந்த வேலையும் இல்லாமல் வீட்டில் இருப்பது தாங்கமுடியாத கஷ்டம். தனிமைப்படுத்தப்பட்டதால் மன அழுத்தம் ஏற்பட்டது என தெரிவித்தார்.

2015-ம் ஆண்டில் அரசு மற்றும் பாகுபாடு தடுப்புக்கான உயர் அதிகாரியிடம் புகார் அளித்தார். இதையடுத்து பிரச்சனையை தீர்க்க மத்தியஸ்தர் நியமிக்கப்பட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், வான் வாசென்ஹோவ் முன்னாள் நிறுவனத்தின்மீது வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் ஆரஞ்சு நிறுவனத்தின் மீது பாகுபாடு மற்றும் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். பணி எதுவும் தராமல் ஊதியம் மட்டும் வழங்கி வந்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளார்.
 

Leave a comment

Comment