TamilsGuide

தலவாக்கலையில் தனியார் பேருந்துகளின் சாரதிகள் பணிப்புறக்கணிப்பு

டயகம தொடக்கம் தலவாக்கலை வரை சேவையில் ஈடுபட்டுவந்த அனைத்து தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் இன்று காலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக டயகம நகர் தொடக்கம் மன்றாசி, ஹோல்புரூக், திஸ்பன சந்தி வழியாக மெராயா ஊடாக நுவரெலியாவுக்கும், நாகசேனை, மற்றும் லிந்துலை வழியாக தலவாக்கலைக்கு பயணிக்கும் தனியார் போக்குவரத்துச்சேவை ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

அதேநேரத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துகள் சேவையில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மிக நீண்டகாலமாக டயகம நகரிலிருந்து லிந்துலை நகரம் வரை சுமார் 23 கிலோமீட்டர் தூர பிரதான வீதி செப்பனிடப்படாமல் குன்றும் குழியுமாக காணப்படுகிறது. இவ் வீதியின் சீர்த்திருத்தம் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் தாமதப்போக்கை கடைப்பிடித்து வருகின்றனர்.

இந்நிலையில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கைகளை முன் வைத்து இவ் வீதி ஊடாக தனியார் போக்குவரத்து சேவையை புறக்கணித்துள்ளதாக தனியார் போக்குவரத்து உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
 

Leave a comment

Comment