TamilsGuide

ஜி7 மாநாட்டில் உயிர்பெற்ற மெகா திட்டம்.. 

அமெரிக்கா, ஜப்பான், கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து நாடுகளை கொண்ட ஜி7 கூட்டமைப்பின் 50வது உச்சி மாநாட்டை இந்த வருடம் இத்தாலி தலைமையேற்று நடத்தியது. கடந்த ஜூன் 13 முதல் 15 வரை நடந்த இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் உக்ரைன் ரஷ்ய போர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. குறிப்பாக இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா வழித்தடத்தை மேம்படுத்துவதற்கான முடிவு எட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டெல்லியில் நடந்த ஜி-20 மாநாட்டில் இந்த வழித்தடத்தை உருவாக்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் அதை செயல்படுத்துவதற்கான பணிகளில் தொய்வு ஏற்பட்டது.

இந்த திட்டத்தில் இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி மற்றும் அமெரிக்கா ஆகியவை அடங்கும். இது இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா நாடுகளில் ரயில் மற்றும் கப்பல் வழித்தடத்தை ஏற்படுத்தி பொருளாதார பயன்பாட்டிற்காக இணைக்கும் திட்டமாகும்.

இந்தியாவின் மேற்கு கரையில் இருந்து அனுப்பப்படும் பொருட்கள் கப்பல் வழியாக எமிரேட்ஸுக்கு சென்று அங்கிருந்து ரயில் வழியாக ஐரோப்பாவிற்கு செல்லும். இந்நிலையில்தான் தற்போது ஜி7 நாடுகள் கூட்டத்தில் எமிரேட்ஸில் ரயில் தடத்தை மேம்படுத்தி இந்த திட்டத்தை செயல்படுத்துவது என்ற முடிவு எட்டப்பட்டுள்ளது.

ஜி 7 நாடுகள் இந்த திட்டதை செயல்படுத்த ஆர்வம் காட்டுவதற்கு முக்கிய காரணம் சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இது அமையும் என்பதே ஆகும். எது எப்படியாக இருந்தாலும் இந்த திட்டத்தால் இந்தியாவில் பொருளாதார உறவுகள் மேம்படும் என்பது உறுதி.

Leave a comment

Comment