TamilsGuide

காத்தான்குடியில் பெண் மீது துப்பாக்கிச்சூடு

காத்தான்குடியில் பெண் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடொன்றில் மகனுடன் வசித்து வந்த பெண் ஒருவர் மீது துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டுள்ளதுடன் குறித்த துப்பாக்கி தாரி தப்பி சென்ற நிலையில் காத்தான்குடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தானகுடி மீன்பிடி இலாஹா வீதி அஹமட் லேனில் நேற்று (14) முற்பகல் இடம்பெற்றுள்ளது.

இதன் போது குறித்த துப்பாக்கி சூட்டில் வீட்டில் வசித்த இளம் பெண் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் வீட்டுக்கு துப்பாக்கியுடன் வந்த நபர் பெண்ணை துப்பாக்கியினால் தாக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு தப்பிச் சென்றிருந்தார்.

இச்சம்பவத்தில் சித்தீக் சிபானியா (வயது32) என்பவரே காயமடைந்துள்ளதுடன் இப்பெண்ணின் கணவர் அவுஸ்ரேலியா நாட்டில் தற்போது இருப்பதாகவும் இவர் ஒரு மௌலவி எனவும் ,குறித்த பெண்ணுக்கு ஒரு மகன் இருப்பதாகவும் பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும் காத்தான்குடி பொலிஸார் குறித்த பகுதியிலுள்ள சி.சி.ரி.வி கமராக்களையும் சோதனை செய்து சந்தேக நபர் அடையாளம் கண்டு சந்தேக நபரை மாலை ஆரையம்பதி செல்வா நகர் கிழக்கிலுள்ள வீடொன்றில் வைத்து கைது செய்துள்ளனர்.

அத்துடன் காயமடைந்த பெண்ணின் வீட்டில் தடவியல் பொலீஸ் பிரிவினர் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் பெண்ணின் வீட்டிலிருந்து துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதுடன் காயமடைந்த பெண் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a comment

Comment