TamilsGuide

SMART CITY ஆக போகும் யாழ் நகர்

யாழ்ப்பாணத்தை ஸ்மார்ட் நகரமாக்குவது (SMART CITY) தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் உடன் , உலக சுகாதார ஸ்தாபன அதிகாரிகள் நேற்று(14) கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தனர்.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.

ஆசியாவில் ஸ்மார்ட் நகரங்களை உருவாக்கும் உலக சுகாதார ஸ்தாபனத்தினால், இலங்கையில் இதுவரையில் 17 ஸ்மார்ட் நகரங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் யாழ்ப்பாண நகரையும் ஸ்மார்ட் நகரமாக்கும் திட்ட யோசனை கடந்த 2019 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டிருந்தது. எனினும் கொவிட் தொற்று காராணமாக இந்த திட்டம் இடைநிறுத்தப்பட்டிருந்தது.

யாழ் பல்கழைக்கழக மருத்துவ பீடத்தின் ஒருங்கிணைப்புடன் இந்த திட்டத்தை செயற்படுத்த உலக சுகாதார ஸ்தாபனம் தற்போது முன்வந்துள்ளதுடன், முன்கள ஆய்வுகளையும் நடத்தியுள்ளது.

அதற்கமைய, கழிவு முகாமைத்துவம், சுத்தமான குடிநீர், தூய்மை, ஆரோக்கியமான உணவு, ஆரோக்கிய வாழ்வை கட்டியெழுப்பக்கூடிய சூழல் கட்டமைப்பு அடங்கலாக ஒன்பது பிரிவுகளின் கீழ் ஸ்மார்ட் நகர திட்டத்தை நடைமுறைப்படுத்த உலக சுகாதார ஸ்தாபனம் தீர்மானித்துள்ளது.

இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஆளுநரின் அனுமதியை பெற்றுக்கொள்ளும் நோக்குடன் நேற்றைய தினம் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த செயற்பாட்டிற்கான முழுமையான திட்ட முன்மொழிவை சமர்பிக்குமாறு இதன்போது ஆளுநர் உலக சுகாதார ஸ்தாபன அதிகாரிகளுக்கு தெரிவித்தார்.

அத்துடன் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த தேவையான உதவிகளை பெற்றுக்கொடுக்குமாறு வடக்கு மாகாண சுகாதார மற்றும் உள்ளூராட்சி திணைக்களங்களின் அதிகாரிகளுக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.

Leave a comment

Comment