TamilsGuide

தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் நடத்த தயாரில்லை - தேசிய மக்கள் சக்தி

13ஆவது திருத்தச் சட்டம் தோல்வி கண்ட பொறிமுறையாக இருந்த போதிலும் மாற்றுத் தீர்வை முன்வைக்காமல் அதனை நீக்க முடியாது எனவும் தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் நடத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி தயாரில்லை எனவும் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் மூலம் கடந்த காலங்களில் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டு வந்துள்ளனர். இவ்வாறு தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் நடத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி தயாரில்லை. எனவே, இந்த நாட்டை மாற்றுவதற்காக அனைத்து இன மக்களையும் அரவணைத்துக்கொண்டு புதியதொரு திசையை நோக்கி நகர வேண்டும் என தெரிவித்தார்.

13 ஆவது திருத்தச் சட்டம் ஊடாக எதிர்பார்க்கப்பட்ட விடயங்கள் நிறைவேறாத போதிலும், அது வெள்ளை யானையாகக் கருதப்பட்டாலும் தற்போது வடக்கு, கிழக்கு மக்கள் 13 என்பது தாம் வென்றெடுத்த உரிமையாகவே கருதுகின்றனர் என நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.

எனவே, இதற்கு மாற்றுத் தீர்வை வழங்காமல் ஒரேடியாக 13 ஐ நீக்கினால் அது வேறு பிரச்சினைக்கு வழிவகுக்கும். 13 ஆவது திருத்தச் சட்டம் தற்போதுள்ளவாறு அமுலாக்கப்படும். பொருளாதாரப் பிரச்சினைக்குத் தீர்வு கண்ட பின்னர், அதனைக் குறுகிய காலப்பகுதிக்குள் செய்ய முடியும் என்பதோடு,

புதிய அரசமைப்பு கொண்டுவரப்படும். அதன்மூலம் அனைத்து இன மக்களினதும் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும். அனைவரும் சம உரிமை பெற்ற சமூகமாக வாழமுடியும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Comment