TamilsGuide

ரஷியாவிற்கு ஆயுதங்கள் விற்பனை செய்ய மாட்டோம் என சீன அதிபர் என்னிடம் தெரிவித்துள்ளார் - ஜெலன்ஸ்கி

உக்ரைன் மீது ரஷியா கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் போர் தொடுத்தது. இன்னும் தாக்குதல் நடைபெற்றுதான் வருகிறது. ரஷியாவுக்கு பதிலடி கொடுக்க உக்ரைன் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளை பெரிதும் நம்பியுள்ளது.

அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்கள் வழங்கி வருகிறது. இதனால் உக்ரைன் தொடர்ந்து ரஷியாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.

அதேவேளையில் வடகொரியா, சீனா உள்ளிட்ட நாடுகள் ரஷியாவுக்கு மறைமுகமாக உதவி வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. ரஷியாவுக்கு உதவி செய்து வரும் நிறுவனங்களுக்கு எதிராக பொருளாதார தடைவிதித்து வருகிறது.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து உக்ரைன் நாட்டில் அமைதி நிலவ முயற்சி மேற்கொண்டு வருகிறார். மேலும், அமைதிக்கான மாநாடு ஒன்றை நடத்த இருக்கிறது. இதில் பெரும்பாலான நாடுகள் கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் டெலிபோன் மூலம் பேசியதாகவும், அப்போது "சீன அதிபர் ஜி ஜின்பிங் ரஷியாவுக்கு எந்த ஆயுதங்களையும் விற்பனை செய்யமாட்டோம் என தெரிவித்தார்" என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

மேலும், "அவர் மரியாதைக்குரிய நபரா? இல்லையா? என்று பார்ப்போம். ஏனென்றால், அவர் எனக்கு வார்த்தை கொடுத்துள்ளார்" என்றார்.

இது தொடர்பாக ஜோ பைடன் கூறுகையில் "ரஷியாவிற்கு சீனா ஆயுதங்கள் விற்பனை செய்யவில்லை என்கிறது. ஆனால், ஆயுதங்கள் தயாரிப்பதற்கான திறன் மற்றும் டெக்னாலஜி உள்ளிட்டவைகளை வழங்குகிறது. இவைகள் ரஷியாவிற்கு உதவுகின்றன.

உக்ரைனுக்கும் சீனாவுக்கும் இடையில் அமைதி தொடர்பான ஒரே பார்வை இருந்தால், இரு நாட்டிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடக்கும். சீனாவுக்கு வேறு பார்வை இருந்தால், அமைதிக்கான மாற்று தயார் செய்யும் என ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
 

Leave a comment

Comment