TamilsGuide

சீனாவின் முக்கிய நகரங்கள் குறித்து ஆய்வில் வெளியாகியுள்ள தகவல்

சீனாவின் (China) முக்கிய நகரங்களில் கிட்டத்தட்ட பாதியளவானவை நீரில் மூழ்கி மில்லியன் கணக்கான உள்ளூர் மக்களை வெள்ள அபாயத்தில் ஆழ்த்தியுள்ளதாக ஆய்வு ஒன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

சீனாவின் நகர்ப்புற நிலப்பரப்பில் 45% வீதமானவை ஒரு வருடத்திற்கு 3 மில்லி மீட்டரை விட வேகமாக மூழ்கி வருவதாகவும், 16% வீதமானவை ஆண்டுக்கு 10 மில்லி மீட்டருக்கு மேல் மூழ்கி வருவதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுக்காக 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 82 சீன நகரங்களை ஆய்வாளர்கள் ஆய்வு செய்துள்ளனர்.

நீர் பிரித்தெடுப்பு

செயற்கைக்கோள்களிலிருந்து ரேடார் துடிப்புகளைப் பயன்படுத்தி செயற்கைக்கோளுக்கும் தரைக்கும் இடையிலான தூரத்தில் ஏதேனும் மாற்றங்கள் உள்ளனவா என்பதை கண்டறிந்துள்ளனர்.

இதன்போது, 2015 மற்றும் 2022இற்கு இடையில் நகரங்களின் உயரங்கள் எவ்வாறு மாறியுள்ளன என்பது கண்டறியப்பட்டுள்ளதோடு சீனாவின் மிகப்பெரிய நகரமான ஷாங்காய், கடந்த 100 ஆண்டுகளில் சுமார் 3 மீட்டர் மூழ்கிய போதிலும், தொடர்ந்து குறைந்து வருகின்ற நிலையில் பீஜிங் (Beijing) நகரும் தியான்ஜிங் (Tianjin) நகரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன. 

எனினும், ஆராய்ச்சியில் ஈடுபடாத கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகத்தின் காலநிலை தழுவல் பேராசிரியரான ரொபர்ட் நிக்கோல்ஸ் ( Robert Nicholls), நீரை பிரித்தெடுத்தலே இதற்கான முக்கிய காரணம் என்று கூறியுள்ளார்.

மேலும் சீனாவில் புவியியல் ரீதியாகப் பார்த்தால், சமீபத்தில் வண்டல் படிந்த பகுதிகளில் ஏராளமான மக்கள் வாழ்கின்றனர் என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, பிரச்சினைக்கான தீர்வு நிலத்தடி நீரை பிரித்தெடுப்பதில் நீண்டகால, நீடித்த கட்டுப்பாடு மாத்திரமே என்று அவர் பரிந்துரைத்துள்ளார்.

இருப்பினும் இந்தப் பிரச்சினை சீனாவில் மட்டும் இல்லை. இந்தோனேசியாவும் (Indonesia) மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றாக உள்ளதோடு ஐக்கிய அமெரிக்காவின் ( United States) புவியியல் ஆய்வு படி, 45 மாநிலங்களில் 17,000 சதுர மைல் நிலப்பரப்பு நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளன.
 

Leave a comment

Comment