TamilsGuide

காதல் விவகாரம் - கிரித்தல பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டில் யுவதி உயிரிழப்பு

பொலன்னறுவை, கிரித்தல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், 17 வயதுடைய யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.

பொலன்னறுவை, கிரித்தல பிரதேசத்தில் நேற்று இரவு 8.45 மணியளவில் இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

40 வயதுடைய நபர் ஒருவரினாலேயே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 17 வயதுடைய யுவதி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த யுவதி, துப்பாக்கிச் சூடு நடத்திய குறித்த நபருடன் சில வருடங்களுக்கு முன்னர் காதல் தொடர்பில் இருந்தவர் என்றும், இரண்டு வருடங்களுக்கு முன்னர் இவர்கள் தனியாக வசித்து வந்துள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.

எனினும், இவர்களிடையிலான கருத்து முரண்பாடு காரணமாக சில நாட்களுக்கு முன்னர், குறித்த யுவதி அவரது பெற்றோரின் வீட்டுக்கு வந்த நிலையிலேயே இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த நபர், உயிரிழந்த குறித்த யுவதியை தனது வீட்டுக்கு வந்து வசிக்குமாறு பல தடவைகள் கேட்டுக் கொண்டபோதிலும், அதற்கு யுவதி இணங்காமல் இருந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக குறித்த யுவதி அவரது தாயாருடன் அயல் வீட்டுக்கு சென்றிருந்தபோது, அங்கு வந்த குறித்த நபர், யுவதி மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

மின்னேரிய பொலிஸார் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Comment