TamilsGuide

சஜித் பிரேமதாச பணத்தின் பின்னால் செல்பவரல்ல -ஜி.எல்.பீரிஸ்

அரசாங்கத்தில் இருந்து விலகி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கி வருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான சுதந்திர மக்கள் சபையின் 6 பேர் இன்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய கூட்டணியில் இணைந்து கொண்டுள்ளனர்.

ஜி.எல் பீரிஸ், டிலான் பெரேரா, நாலக கொடஹேவா, உபுல் கலப்பத்தி, வசந்த யாப்பா பண்டார மற்றும் கே.பி.எஸ் குமாரஸ்ரீ ஆகியோரே இவ்வாறு இணைந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து கருத்துத் தெரிவித்த  ஜி.எல்.பீரிஸ் ”எந்தவொரு அரசாங்கமும் மக்கள் ஆணையூடாகவே அமைக்கப்படவேண்டும். அதேபோன்று எமது அரசாங்கம் இது என்ற உணர்வு மக்களுக்கும் ஏற்பட்வேண்டும். தற்போதைய அரசாங்கத்தின் தலைமைத்துவத்தை வகிக்கும் ரணில் விக்கிரமசிங்க கடந்த காலத்தில் இடம்பெற்ற தேர்தலின் போது மக்களால் நிராகரிக்கப்பட்டவர்.

ஆனால் ஆளும் கட்சியினர் வங்குரொத்து நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுத்தவர் ரணில் என பெருமை கொள்கின்றனர். ஆனால் கடன் மறுசீரமைப்பின் ஊடாக பாதிக்கப்படுவது அப்பாவி பொது மக்கள் என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ளவில்லை
2048ஆம் ஆண்டில் டிஜிட்டல் பொருளாதாரத்தை நாட்டில் உருவாக்கப்போவதாக கூறுகின்றனர். ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய அரசியல் கூட்டணியில் நாம் இன்று கைச்சாத்திட்டுள்ளோம்.

சஜித் பிரேமதாச எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பணத்தின் பின்னால் சென்றவர் அல்ல. அவருக்கு நீண்ட கொள்கை திட்டம் காணப்படுகின்றது. மக்களுக்கான வேலைத்திட்டங்களை அவரின் தலைமையின் கீழ் முன்னெடுக்க முடியும். மக்களின் தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றக்கூடிய அரசாங்கம் சஜித் பிரேமதாச தலைமையிலேயே உருவாக்கப்படும்.
ஜனாதபதி தேர்தலில் ரணில் தலைமையிலான தற்போதைய அரசாங்கம் தோல்வியடையும்”எனத் தெரிவித்துள்ளார்.

Leave a comment

Comment