TamilsGuide

20 வருடங்களுக்கும் மேல் தமிழ் சினிமாவில் கோலோச்சிய நட்சத்திர ஜோடி எனில் அது கவுண்டமணி – செந்தில் தான்

80களில் இருந்து 20 வருடங்களுக்கும் மேல் தமிழ் சினிமாவில் கோலோச்சிய நட்சத்திர ஜோடி எனில் அது கவுண்டமணி – செந்தில்தான். இவர்களை திரையில் காட்டினாலே ரசிகர்கள் சிரித்துவிடுவார்கள். துவக்கத்தில் பல படங்களில் தனியாகவே நடித்து வந்த கவுண்டமணி ஒரு கட்டத்தில் செந்திலை தன்னுடன் சேர்த்துகொண்டார்.

ஏனெனில், நாடகத்தில் கவுண்டமணியுடன் சின்ன சின்ன வேடங்களில் செந்தில் நடித்திருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் ஜவுளிக்கடையில் தினமும் 10 ரூபாய் சம்பளம் வாங்கி வேலை செய்து வந்த செந்திலை ‘உனக்கு தினமும் 20 ரூபாய் வாங்கி தருகிறேன்’ என சொல்லி நாடகத்திற்கு அழைத்து வந்தவரே கவுண்டமணிதான்.

ஆனால், நடிப்பதற்கு இல்லை. காட்சி முடிந்தவுடன் ஒரு சீலையை இறக்கிவிடுவார்கள். அதற்குதான் செந்தில் தேவைப்பட்டார். ஒருநாள் ஒரு காட்சியில் நடிக்கும் நடிகர் வராமல் போனதால் அதில் செந்திலை நடிக்க வைத்தனர். அவர் நன்றாகவே நடிக்கவே செந்தில் தொடர்ந்து நடிக்க துவங்கினார்.

பல நூறு படங்களில் கவுண்டமணியும் செந்திலும் இணைந்து காமெடி காட்சிகளில் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தனர். பல திரைப்படங்களின் வெற்றிகளுக்கு இருவரும் காரணமாக இருந்திருக்கிறார்கள். இப்படி போய்க்கொண்டிருக்கும்போது செந்திலை சிலர் தவறாக வழிநடத்தினார்கள்.

அதாவது ‘உங்களால்தான் படங்கள் ஹிட் ஆகிறது. நீங்கள் இல்லாமல் கவுண்டமணி இல்லை’ என சொல்ல அது செந்திலின் தலைக்கு ஏறிவிட்டது. ஒரு நாள் படப்பிடிப்பில் செந்தில் இதை கவுண்டமணியிடமே சொல்ல கடுப்பான அவர் ‘சரிப்பா.. நீ தனியா பண்ணு’ என சொல்லிவிட்டார்.

அதன்பின் கவுண்டமணி பல படங்களிலும் செந்தில் இல்லாமல் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தார். இரண்டாவது ஹீரோ போல கதாநாயகனுடன் எல்லா காட்சியிலும் வந்தார். ஹீரோக்களுடன் இணைந்து காமெடி செய்து ரசிக்க வைத்தார். ஆனால், செந்தில் தனியாக நடித்த படங்களில் காமெடி வொர்க் அவுட் ஆகவில்லை. அப்போதுதான் செந்திலுக்கு உண்மை புரிந்தது. உடனே கவுண்டமணியை சந்தித்து ‘அண்ணே மன்னிச்சிடுங்க. நான் நினைச்சது தப்பு.. நீங்க இல்லாம நான் இல்ல’ என சரணடைந்தார்.

கவுண்டமணியும் பெருந்தன்மையுடன் செந்திலை தன்னுடன் சேர்த்துகொண்டு காமெடியில் கலக்கினார்.

Leave a comment

Comment