TamilsGuide

ஈழத் தமிழர்களுக்காக அமெரிக்கா முன்வர வேண்டும் - விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள் 

இலங்கையில் மோதலைத் தீர்க்க சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஈழத் தமிழர்களுக்கான வாக்கெடுப்பை அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் முன்மொழிந்துள்ளனர்.

இலங்கை அரசாங்கங்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையே நீடித்து வரும் சர்ச்சையைத் தீர்ப்பதற்கான வழிமுறையாக, ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் பொது வாக்கெடுப்பு நடத்த, அமெரிக்க நிர்வாகம் ஆதரவு தர வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களின் கூட்டமைப்பு கூட்டாக அழைப்பு விடுத்துள்ளது.

2024,மார்ச் 28, திகதியிடப்பட்டு, ராஜாங்க செயலர் பிளிங்கனுக்கு இது தொடர்பில் கடிதம் அனுப்பட்டுள்ளது.

170,000 தமிழர்கள் கொல்லப்பட்ட அல்லது காணாமல் போன இனப் போர் முடிவடைந்து 15 ஆண்டுகள் கடந்துவிட்டதை, இந்த கடிதம் அமெரிக்க நிர்வாகத்திற்கு நினைவூட்டியுள்ளது.

மோதலின் மூல காரணத்தை நிவர்த்தி செய்வதிலும் மீறல்களுக்கு நீதி வழங்குவதிலும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு இலங்கை ஒத்துழைக்கத் தவறியதை கடிதத்தில் கையொப்பமிட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் விமர்சித்துள்ளனர்.

இந்தக் கூட்டுக் கடிதம் தொடர்பில் கருத்துரைத்துள்ள தமிழ் அமெரிக்கர் ஐக்கிய அரசியல் நடவடிக்கைக் குழுவின் தலைவர் மீனா இளஞ்செயன்,

"சர்வதேச சட்டத்தின்படி ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்காகக் குரல் கொடுத்த காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த பிரச்சனையை புரிந்து கொண்ட அமெரிக்க காங்கிரசில் சில சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர் என்பது மிகவும் ஆறுதலளிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையின் பொதுச் செயலாளர் சிவா தாமோதரம்பிள்ளை தமது கருத்தில், ஈழத் தமிழர்கள் இறையாண்மையை இழந்து சரியாக 405 ஆண்டுகள் ஆகிவிட்டன, அதன் பின்னர் அவர்கள் சுதந்திரம் பெறவில்லை.

ஆங்கிலேயர்கள் தமிழர்களின் இறையாண்மையை 1948 இல் சிங்களவர்கள் மத்தியில் இல்லாமல் செய்துவிட்டனர்.

இந்தநிலையில் ஈழத் தமிழர்களின் உரிமையான இறையாண்மை மீண்டும் சுதந்திர வாக்கெடுப்பு மூலம் சட்டப்பூர்வமாக்கப்படவேண்டிய நேரம் இது என்று அவர் தெரிவித்துள்ளார்.

1619 இல் போர்த்துக்கேயர்களிடம் இழந்த தமிழர்களின் இறையாண்மையை முழுமையாக மீட்டெடுக்க சர்வதேச ஆதரவை அவர் கோரியுள்ளார். அத்துடன், தமது வரலாற்று ஈடுபாட்டின் காரணமாக, போர்த்துக்கல் மற்றும் ஐக்கிய இராச்சியம் என்பன இந்த அணுகுமுறைக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் தமிழ் மக்கள் பேரவையின் பொதுச் செயலாளர் சிவா தாமோதரம்பிள்ளை வலியுறுத்தியுள்ளார்.

வட கரோலினாவைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினரான டொன் டேவிஸ் தலைமையிலான, பிரதிநிதிகள் சபையின் பத்து உறுப்பினர்களே, அமெரிக்க நிர்வாகத்துக்கான இந்த கூட்டுக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

இலங்கையில் ஐ.நாவின் உண்மை மற்றும் நல்லிணக்க முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்துள்ளன என தெரிவித்துள்ள அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள்  ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கெனிற்கு எழுதியுள்ள கடிதத்தில் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் டொனால்ட் ஜி டேவிஸ் வைலிநிக்கலஸ் ஜோன்கொதைமர் ஜெப்ஜக்சன் சமர்லீ டானி கே டேவிஸ் சூசன் வைல்ட் ராஜாகிருஸ்ணமூர்த்தி ஜமால்போமன் கேப்வாஸ்குவாஸ் ஆகியோர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

 1. ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரித்து, மற்றும் சர்வதேச சட்டங்களின்படி அவர்களுக்குள்ள உரிமைகளின் அடிப்படையில், பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, உலகளாவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜனநாயக வழிமுறையான பொதுவாக்கெடுப்புமுறையை (Referendum) ஆதரிக்கவும்.

2. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகரின் பரிந்துரைகளைப் பின்பற்றி, போரின் போது பொதுமக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு விரிவான சர்வதேச விசாரணைகள் மற்றும் பொறுப்புக்கூறலை ஆதரிக்கவும். அத்தகைய விசாரணையில் இனப்படுகொலை (Genocide) செய்யப்பட்டதா என்பது பற்றிய ஆராய்வதும் அடங்கும்.

3. சுயாதீனமான நீதித்துறை நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும், சாத்தியமான குற்றச்சாட்டுகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (International Criminal Court) விசாரணைகளுக்காகப் பரிந்துரைக்கவும் அமெரிக்காவிற்கு ஐக்கிய நாடுகள் சபையில் - பொதுச் சபை (General Assembly), பாதுகாப்பு கவுன்சில் (Security Council) மற்றும் மனித உரிமைகள் கவுன்சில் (UNHRC) உட்பட- உள்ள தலைமைப் பாத்திரத்தை வாய்ப்பாகப் பயன்படுத்தவும்" என தெரிவிக்கப்பட்டள்ளது.
 

Leave a comment

Comment