கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை அஞ்சலி.
இதில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி தன்னை ஒரு சிறந்த நடிகையாக அடையாளப்படுத்திக் கொண்டார்.
பின் அங்காடித் தெரு, மங்காத்தா, எங்கேயும் எப்போதும், அரவான், கலகலப்பு, சேட்டை உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தார்.
தெலுங்கிலும் படங்கள் நடித்து வந்தவர் தமிழில் நீண்ட இடைவேளைக்கு பிறகு சிங்கம் 2 படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடினார். ஜெயம் ரவியுடன் சகலகலா வல்லவன் படத்தில் நடித்தவருக்கு பின் பெரியதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் நடிகை அஞ்சலி பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
தெலுங்கு திரையுலகை சேர்ந்த தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்யவிருப்பதாகவும், அந்தத் தயாரிப்பாளர் ஏற்கெனவே விவாகரத்து ஆனவர் என்றும் கூறப்படுகிறது.
ஒரு திரைப்பட விழாவில் சந்தித்தபோது ஏற்பட்ட பழக்கம் இரண்டு பேருக்கும் காதலாக மாறியிருக்கிறது என்றும் தெலுங்கு திரைத்துறை வட்டாரத்திலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.