TamilsGuide

யாழில் மர்மப் படகு மோதியதில் மீனவர் உயிரிழப்பு 

யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பரப்பில் கட்டுமரம் மூலம் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவர் மீது மர்மப் படகொன்று  மோதியதில் மீனவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

60 வயதுடைய மருதங்கேணியை சேர்ந்த மாரிமுத்து முத்துசாமி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த சனிக்கிழமை அதிகாலை கட்டுமரத்தில் மீன் பிடிக்க கடலுக்கு சென்ற வேளை அவரது கட்டுமரத்தை இனம் தெரியாத நபர்களின் படகு மோதி விபத்தினை ஏற்படுத்தியிருந்ததாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் பாரிய சேதங்களுடன் கட்டுமரம் கரையொதுங்கி இருந்த நிலையில் தொழிலுக்கு சென்ற தொழிலாளியை காணாததால், அவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதனையடுத்து நேற்றையதினம் மருதங்கேணி கடற்கரையில் சடலம் கரை ஒதுங்கியுள்ளது.

சடலத்தின் முகத்தில் காயங்கள் காணப்பட்டமையால், கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிபதி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணைகளை முன்னெடுத்திருந்தார்.

அத்துடன் சடலத்தை மீட்டு, கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனைக்காக ஒப்படைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிபதி கட்டளையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment