TamilsGuide

கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்களுக்கு இறுதிக் கிரியை

கனடாவில் படுகொலை செய்யப்பட்ட 6 இலங்கையர்களின் இறுதிக் கிரியைகளை, ஒட்டாவா நகரில் அமைந்துள்ள பௌத்த விகாரையில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கனடாவின் ஒட்டாவாவின் புறநகர் பகுதியான பார்ஹேவன் என்ற இடத்தில் கடந்த புதன்கிழமை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 6 இலங்கையர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சம்பவத்தில் படுகாயமடைந்த தனுஷ்க விக்ரமசிங்கவின் அனுமதிக்கு இணங்க, உயிரிழந்த அவரின் மனைவியான தர்ஷனி ஏகநாயக்க மற்றும் அவரது 4 பிள்ளைகளின் இறுதிக் கிரியைகள் பிரேத பரிசோதனையின் பின்னர் பார்ஹேவன் பௌத்த விகாரையினால் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இறுதிச் சடங்கிற்காக இலங்கையில் இருந்து அவர்களது உறவினர்கள் கனடாவுக்கு வருகைத் தரவுள்ளனர் என்று ஒட்டாவாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

மேலும், கொலையை செய்த பிராங்க் டி சொய்சா என்ற 19 வயதுடைய சந்தேக நபர், தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில் இருந்தவர் என பார்ஹேவன் விகாரையின் விகாராதிபதி மஹாகம சுனீத தேரர் தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment