"சரத் பொன்சேகா விரும்பினால் பொதுஜன பெரமுணவில் இணைந்து கொள்ள முடியும்" என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பு, கோட்டையில் அமைந்துள்ள சம்புத்த ஜயந்தி விகாரைக்கு வழிபாடுகளுக்காக நேற்றையதினம்(20) வருகை தந்திருந்தபோதே ஊடகவியலாளர்களிடம் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவும் 45 ஆண்டு காலமாக எதிரெதிர் அரசியல் முகாம்களில் செயற்பட்டவர்கள்.ஆனால் நாங்கள் இன்று ரணில் விக்ரமசிங்கவையும் ஏற்றுக் கொண்டுள்ளோம்.
சரத் பொன்சேகா, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் காலத்தில் புலிகளுக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியவர்.
அந்த வகையில் அவர் பொதுஜன பெரமுணவில் இணைந்து கொள்ள விரும்பினால் எமது கதவுகள் என்றும் திறந்தே உள்ளது” என தெரிவித்தார்.