அரச குடும்பத்திற்கு மீண்டும் திரும்பி, பணிகளை முன்னெடுக்கவும், நோயால் பாதிக்கப்பட்டுள்ள தந்தைக்கு உதவவும் இளவரசர் ஹரி ஆசைப்படுவதாக அரணமனை வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. மன்னர் சார்லஸ் மற்றும் அவரை பாதித்துள்ள புற்றுநோய் குறித்தும் தந்தையை காணும் பொருட்டு 10,000 மைல்கள் பயணப்பட்டது தொடர்பிலும் இளவரசர் ஹரி மனம் திறந்துள்ளார்.
மன்னருக்கு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி, குடும்பத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை தீர்க்கும் என்று தாம் நம்புவதாகவும் ஹரி குறிப்பிட்டுள்ளார். தமது குடும்பத்தை மிகவும் நேசிப்பதாக குறிப்பிட்டுள்ள ஹரி, அதன் பொருட்டே 10,000 மைல்கள் பயணித்ததாகவும், தந்தையை நேரில் கண்டு, அவருடன் நேரம் செலவிட முடிந்ததையும் குறிப்பிட்டுள்ளார்.
நோயாளியான தந்தை காரணமாக பிரிந்திருக்கும் குடும்பங்கள் இணையும் வாய்ப்பு தொடர்பிலும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஹரியின் நடவடிக்கைகள் மற்றும் செயல்களை கூர்ந்து கவனித்துள்ள அரண்மனை ஊழியர்கள், அரச குடும்பத்திற்கு திரும்புவதை ஹரி மிகவும் விரும்புவதாக குறிப்பிட்டுள்ளனர்.
ஹரியின் வருகை அரச குடும்பத்திற்கு பலனளிக்கும் என்று சார்லஸ் மன்னரும் கருதுவதாக கூறப்படுகிறது. 2020ல் இருந்தே ஹரி - மேகன் தம்பதி அரச குடும்பத்தில் இருந்து விலகி, அமெரிக்காவில் வசித்து வருகின்றனர்.
தற்போது சார்லஸ் மன்னருக்கு புற்றுநோய் அறிகுறி உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இளவரசர் ஹரி அரண்மனைக்கு திரும்ப வேண்டும் என்ற பேச்சு எழுந்துள்ளது.
நோயாளியான மன்னருக்கு உதவும் பொருட்டு, குடும்பங்கள் ஒன்றிணைவதே முறையாக இருக்கும் என்றும் பலர் குறிப்பிட்டுள்ளனர். மன்னர் மற்றும் ஹரி தனியாக பேசிக்கொண்ட தகவல்கள் ஏதும் இதுவரை வெளிவராத நிலையில், அந்த 30 நிமிட சந்திப்பு புதிய மாற்றங்களை கொண்டுவர இருப்பதாக அரணமனை வட்டாரத்தில் கூறப்படுகிறது.