ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதாம் ஆண்டில் வெளியான களத்தூர் கண்ணம்மா படத்தில் தனது ஆறாவது வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தேசிய விருதைப் பெற்ற கமல்ஹாசன் திரைப்படங்களில் உதவி நடன இயக்குனராகச் சில காலம் பணியாற்றிவிட்டு எழுபதுகளில் மீண்டும் நடிகராகத் தொடர்ந்தார். தனது 21ஆம் வயதில் நேதாஜி எழுதிய ஞாயிறு ஒளி மழையில் என்ற பாடலை அந்தரங்கம் படத்தில் ஜி.தேவராஜன் இசையில் பாடி நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகம் கண்டடைந்த குரல்நிலவுகளின் வரிசையில் தானும் ஒருவரானார் கமல். பின்னதான 46 வருடங்களில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய ஆறு மொழிகளில் 100 பாடல்களுக்கு மேல் பாடிய பாடகராகவும் 25 பாடல்களுக்கு மேல் எழுதியிருக்கிற பாடலாசிரியராகவும் விளங்கி வருகிறார்.
ஜி.தேவராஜன், எம்.பி.சீனிவாசன், எம்.எஸ்.விஸ்வநாதன், கண்ணூர் ராஜன், சங்கர்-கணேஷ், சந்திரபோஸ், லக்ஷ்மிகாந்த்-ப்யாரேலால், தேவா, கார்த்திக்ராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், யுவன்ஷங்கர் ராஜா, ஷங்கர்-எஸான்-லாய், வித்யாசாகர், ரமேஷ் விநாயகம், பரத்வாஜ், ஹிமேஷ் ரேஷமியா, ஸ்ருதி ஹாஸன், தேவிஸ்ரீ பிரசாத், ஜிப்ரான், கே.எஸ்.சுந்தரமூர்த்தி ஆகிய இசையமைப்பாளர்கள் இசையில் பாடல்களைப் பாடியிருக்கும் கமல்ஹாசன் அதிகபட்சமாக இளையராஜா இசையில் 44 பாடல்களைப் பாடியிருக்கிறார்.
Paravasam Nayagan