TamilsGuide

எதிர்வரும் தேர்தலில் குடும்ப அரசியல் முடிவிற்கு வரும் - அனுரகுமார

இந்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் குடும்ப அரசியலை முடிவுக்கு கொண்டு வரவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டு மக்களுக்கு தற்போது இரண்டு பாதைகளே உள்ளன. பழைய வீதியில் சென்று படுகுழியில் விழுந்து புதைந்து போகலாம்.

அவ்வாறு இல்லையென்றால் புதிய பாதையில் சென்று மீண்டெழுந்து கொள்ளலாம். நாம் புதிய மறுமலர்ச்சியை உருவாக்குவோம்.

அது தொடர்பில் மக்களை தெளிவுபடுத்த காத்திருக்கிறோம். எம்மால் முடிந்தவற்றை நாம் செய்வோம். எமக்கு முன்னால் உள்ள எதிரிகள் எமக்கு முக்கியம் அல்ல.

நாம் தோல்வியடைந்தாலும் அடுத்த நாளிலிருந்து அரசியலில் ஈடுபடுவோம். 98 வருடங்கள் தமது குடும்பம் அரசியல் செய்வதாக நாமல் கூறியதைக் கேட்டேன்.

அதன் மூலம் அவர் எதனை கூறுகின்றார். தந்தையிடத்தில் இருந்து மகனுக்கும் மகன் இடத்திலிருந்து தந்தைக்கும் வழங்கப்படும் அரசியலை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.

அரசியலில் தோல்வி அடைந்தால் எமக்கு ஒன்றும் கிடைக்க போவதில்லை.

எனினும் அவர்கள் சில விடயங்களை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். இலங்கையில் இதுவரையில் 8 ஜனாதிபதிகள் பதவி வகித்துள்ளனர்.

அவர்களில் மூவர் உயிரிழந்துள்ளனர். சந்திரிக்காவும் மைத்திரியும் மஹிந்தவும் கோட்டாவும் ஒரே மேடையில் அல்லவா நிற்கிறார்கள்” என அனுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.
 

Leave a comment

Comment