TamilsGuide

ரஜினி சிறுகதையின் அடிப்படையில் உருவானது டெஃப் ஃப்ராக்ஸ்- ஜீவா

இந்திய சினிமாவில் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றிப்படங்களை வழங்கி வரும் நடிகர் ஜீவா, திரையுலகில் அறிமுகமாகி 21 வருடங்களை நிறைவு செய்துள்ளார். வெற்றிகரமாக தனது திரைப் பயணத்தை தொடங்கிய அவர், அடுத்த கட்டமாக இசை தயாரிப்பில் இறங்கியுள்ளார்.

அவரது 'டெஃப் ஃப்ராக்ஸ்' ரெக்கார்ட்ஸ் மியூசிக் லேபிள் என்ற புதிய முயற்சியின் துவக்க விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில், நடிகர்கள் ஜித்தன் ரமேஷ், ஆர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, விஷ்ணு விஷால், மிர்ச்சி சிவா, விச்சு விஸ்வநாத், விவேக் பிரசன்னா, கலையரசன், ஆதவ் கண்ணதாசன், ஜெகன், இயக்குனர் மோகன் ஜி , நடிகர் மற்றும் இசை அமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, சித்தார்த் விபின், சந்தோஷ் நாராயணன் மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் ஜீவா பேசியதாவது, கடந்த ஒரு வருடமாக இந்த 'டெஃப் ஃப்ராக்ஸ்' மியூசிக் லேபிள் நிறுவனத்திற்காக என்னென்ன தயாரிப்புகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம் என்பதை இன்று வெளியிடுகிறோம். மேலும் இந்த நிறுவனம் சுயாதீன கலைஞர்களுக்கான பாடல்கள் மற்றும் குறும்படங்களை தயாரிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. எங்களது தாய் நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் வாயிலாக 40-க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குனர்களை அறிமுகப்படுத்தியது போல இந்த நிறுவனம் மூலம் சுயாதீன கலைஞர்களை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமைக் கொள்கிறோம்.

ரஜினிகாந்த் அவர்கள் கூறிய சிறுகதையின் அடிப்படையில் 'யார் சொல்வததையும் கேட்காமல் நமது வேலையை நாம் செய்து கொண்டே முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும்' என்பதை வைத்து இந்நிறுவனத்திற்கு 'டெஃப் ஃப்ராக்ஸ்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிறுவனம் கலைக்கூடராமாக இருக்கும் என்று பேசினார்.
 

Leave a comment

Comment