TamilsGuide

இந்திய குடியரசு தினம் - ஜீவன் தொண்டமான் வாழ்த்து


எல்லா வழிகளிலும் உதவிவரும் இந்தியாவின் உதவி தொடரும் என உறுதியாக நம்புவதாக இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 75 ஆவது குடியரசு தினம் இன்று (26) கொண்டாடப்படுகின்றது. இதனைமுன்னிட்டு அமைச்சர் ஜீவன் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது,

ஒட்டுமொத்த உலகுக்குமே அஹிம்சையை போதித்த நாடுதான் பாரத தேசமாகும். ஜனநாயகத்தின் இருப்பிடமாகவும் அந்நாடு கருதப்படுகின்றது. இன்று உலகில் பலமான பொருளாதாரத்தை கொண்டுள்ள நாடுகளின் பட்டியலிலும் இணைந்துள்ளது. அதுமட்டுமல்ல தொழில்நுட்ப துறையிலும் வேகமாக முன்னேறிவருகின்றது.

நிலவின் தென்துருவத்தில் கால்பதித்த முதல் நாடு என்ற பெருமையுடன் இந்தியா இன்று குடியரசு தினத்தைக் கொண்டாடுகின்றது. அனைத்து இந்திய மக்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

இந்தியா என்பது எமது தொப்புள் கொடி உறவு, இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்த காலகட்டத்தில் முந்தியடித்துக்கொண்டு உதவி வழங்கிய நாடு. ஆதனை என்றும் மறக்கமாட்டோம்.

எமது மலையக பெருந்தோட்ட மக்களுக்கும் இந்தியா தொடர்ச்சியாக உதவிகளை வழங்கிவருகின்றது. அதனையும் இந்த நேரத்தில் நினைவுகூருகின்றேன். தெற்காசிய பிராந்தியத்தின் காவலாக விளங்கும் இந்தியா மென்மேலும் உயரவேண்டும்.” – என்று குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a comment

Comment