TamilsGuide

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு லைக்கா ஞானம் அறக்கட்டளை உதவி

இலங்கையில் அண்மைய நாட்களில் தொடரும் காலநிலை அனர்த்தத்தால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக கடந்த டிசம்பர் 28 முதல் 2024 ஜனவரி 4 ஆம் திகதிவரை பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேச செயலாளர் பிரிவுகளை கடுமையாக பாதித்துள்ளது.

இந்த வெள்ள அனர்த்தம், பல கிராமங்களை தனிமைப்படுத்தியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் புனானை, மைலவெட்டுவான், ஏறாவூர், கட்டுமுறிவு, சித்தாண்டி, வந்தாறுமூலை மேற்கு, உள்ளிட்ட பல கிராமங்களில் வாழும் மக்கள் பேரிடருக்கு உள்ளகியுள்ளனர்.

இந்தக் கிராமங்களில், வெள்ள அனர்த்தத்தால் ஏற்பட்ட பேரிடரில் பாதிக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு, இணை நிறுவனர்களான லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன், லைக்கா ஹெல்த்தின் தலைவர் திருமதி பிரேமா சுபாஸ்கரன், திருமதி ஞானாம்பிகை அல்லிராஜா தலைமையிலான லைக்கா ஞானம் அறக்கட்டளை உதவிக்கரம் நீட்டியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமையும் (14.01.24) பொங்கல் தினத்திலும் (15.01.24), பாதிக்கப்பட்ட கிராமங்களின் மக்களுக்கான உலர் உணவுப் பொருட்களுடன் பொங்கலையும், லைக்கா ஞானம் அறக்கட்டளை நேரடியாக வழங்கி வைத்துள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்கான உதவிகளை லைக்கா ஞானம் அறக்கட்டளை தொடர்ந்து முன்னெடுத்து செல்வது குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment