1995-ம் ஆண்டு வெளியான ரஜினிகாந்தின் எவர்கிரீன் படமான பாட்ஷா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள நடிகை நக்மா தனது 48-வது வயதில் திருமணம் குறித்து உணர்வுப்பூர்வமாக பேசியுள்ளார்.
1990-ம் ஆண்டு இந்தியில் வெளியான பாஹி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நக்மா. தொடர்ந்து இந்தி தெலுங்கு, படங்களில் நடித்து வந்த நக்மா, 1994-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான காதலன் படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அடுத்து 1995-ம் ஆண்டு வெளியான ரஜினிகாந்தின் எவர்கிரீன் படமான பாட்ஷா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இந்த இரு படங்களுமே அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், தொடர்ந்து, சரத்குமார், சத்யராஜ், கார்த்திக், பிரபு, உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள நக்மா, தமிழ் மட்டுமல்லாமல் பேஜ்பூரி மொழி படங்களிலும் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருந்தார். கடந்த 2001-ம் ஆண்டு வெளியான அஜித்தின் சிட்டிசன் படத்திற்கு பிறகு தமிழில் நடிக்காத நக்மா, 2008-ம் ஆண்டுக்கு பிறகு நடிப்பில் இருந்து விலகினார்.
தற்போது 48 வயதாகும் நக்மா இன்னும் திருமணம் செய்து கொள்ளாத நிலையில், அவரது தங்கைகளாக ரோஷினி, ஜோதிகா ஆகியோர் திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டனர். இதனிடையே சமீபத்தில் தனது திருமணம் குறித்து உணர்வுப்பூர்வமாக பேசியுள்ள நக்மா,“எனக்குத் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்ற எண்ணமில்லை. எனக்கும் ஒரு துணை, குழந்தைகள் வேண்டும் என்று நினைக்கிறேன். திருமணத்தின் மூலம் ஒரு குடும்பம் உருவாக வேண்டும்.
என் திருமணம் விரைவில் நடக்குமா என்று தெரியவில்லை. ஆனால் திருமணம் செய்து கொண்டால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன். மகிழ்ச்சி என்பது வாழ்க்கையில் ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமல்ல ,” என கூறியுள்ளார். நக்மாவின் இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நடிகர் சரத்குமார், கிரிக்கெட் வீரர் கங்குலி, ஹிந்தி நடிகர் மனோஜ் திவாரி, போஜ்புரி நடிகர் ரவி கிஷன் ஆகியோருடன் நக்மா காதல் கிசுகிசுவில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழச்சி கயல்விழி