TamilsGuide

2024இல் இலங்கையர்களுக்கு காத்திருக்கும் பெரும் நெருக்கடி

கடந்த வருடங்களில் மூன்று வேளை உணவு உட்கொண்ட மக்கள் தற்போது இரண்டு வேளைகள் உணவு உண்பதைப் போல, எதிர்வரும் ஆண்டில் ஒரு வேளை உணவினை மாத்திரம் உண்ணக்கூடிய சூழ்நிலை ஏற்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

2023ஆம் ஆண்டைவிடவும் 2024ஆம் ஆண்டு படு பயங்கரமான ஆண்டாக அமையப்போகின்றது. பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியடைப்போகும் ஆண்டாக அமையப்போகின்றது.

மூன்று வேளை உணவு உட்கொண்ட மக்கள் தற்போது இருவேளைகள்தான் உண்கின்றனர். இந்நிலைமையும் அடுத்த ஆண்டு இல்லாமல்போகக்கூடும்.

எனவே, அரசு உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும். மக்கள் ஆணையுடன் ஆட்சியொன்றை ஏற்படுத்த சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை மீட்பார் எனக் கூறப்பட்டது. ஆனால் என்ன நடக்கின்றது? பொருட்களின் விலைகள் எல்லாம் எகிறிவிட்டன. மக்களால் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கள்வர்கள் சுதந்திரமாக நடமாடுகின்றனர். விலைமனு கோரல்களில் கொள்ளைகள் இடம்பெறுகின்றன. எனவே, இந்நாட்டை மேலும் நாசமாக்காமல் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்துகின்றோம் என குறிப்பிட்டுள்ளார். 

Leave a comment

Comment