TamilsGuide

இது எனக்கு முதல் முறை - நெகிழ்ச்சியில் பிரித்விராஜ்

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சலார்'. இந்த படத்தில் 'பாகுபலி' திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் 'சலார்' படத்தையும் தயாரித்துள்ளது.

இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெருமளவில் ஈர்த்தது. 'சலார்' திரைப்படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் டப்பிங் பணியை நடிகர் பிரித்விராஜ் முடித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளத்தில், "டப்பிங்கின் இறுதிகட்ட சரிபார்ப்பு முடிந்தது. பல ஆண்டுகளாக நான் பணியாற்றிய பல்வேறு மொழிகளில் எனது அனைத்து கதாபாத்திரங்களுக்கும் எனது சொந்தக் குரலைக் கொடுக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.

என்னுடைய சில கதாபாத்திரங்களுக்கு பல மொழிகளில் டப்பிங் பேசியிருக்கிறேன். ஆனால், ஒரு கதாபாத்திரத்திற்கு 5 மொழிகளில் டப்பிங் பேசுவது எனக்கு முதல் முறை. டிசம்பர் 22-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் தேவாவும், வரதாவும் உங்களைச் சந்திப்பார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
 

Leave a comment

Comment