TamilsGuide

வீட்டு வாடகை அதிகமானதால் தெருவில் வாழும் நிலைக்கு வந்த பெண் - வீடு தேடிவந்த அதிர்ஷ்டம்

பிரித்தானியாவில் வாழும் பெண்ணொருவரின் வீட்டு உரிமையாளர் வீட்டு வாடகையை உயர்த்தியதால், வீடற்ற நிலைக்கு தள்ளப்பட்டார் அந்தப் பெண்.

ஆனால், அதிர்ஷ்டம் அவரது வீட்டு வாசல் கதவைத் தட்டி, அள்ளிக் கொடுத்துள்ளது!

செஷல்ஸ் தீவில் பிறந்தவரான ஓஷன் பெல் (Oceanne Belle, 49), லண்டனில் 19 ஆண்டுகளாக தனது கணவரான Didine (56)உடன் வாழ்ந்து வருகிறார்.

அவர் வசித்துவந்த வீட்டின் உரிமையாளர் வீட்டு வாடகையை கடுமையாக உயர்த்தியதால், உறவினர் வீடுகளில் தற்காலிகமாக தங்கிக்கொள்ளும் நிலைக்கு ஆளாகியுள்ளார் ஓஷன். செவிலியர் படிப்பும் படித்துக்கொண்டு, வீட்டு வாடகையையும் அவரால் கொடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்திருக்கிறார் ஓஷன்.

வீடற்ற நிலைமைக்குச் சென்றுவிடுவோமோ என்ற அச்சத்தில் ஓஷன் வாழ்ந்துவந்த நிலையில், ஒருநாள் அதிர்ஷ்டம் அவரது வீட்டுக் கதவைத் தட்டியது.

ஓஷனுக்கு லொட்டரியில் பரிசு விழுந்துள்ளதாக தொடர்ந்து மொபைல் அழைப்புகள் வரவே, யாரோ ஏமாற்றுவதாக எண்ணி அந்த அழைப்புகளை பிளாக் செய்துள்ளார்.

ஒருநாள் யாரோ வீட்டின் கதவைத் தட்டுவதைக் கேட்டு ஓஷன் கதவைத் திறக்க, Omaze என்னும் லொட்டரிக் குழுமத்தைச் சேர்ந்தவர்கள் நின்று வேடிக்கையான கிறிஸ்துமஸ் பாடல்களை பாடிக்கொண்டிருந்திருக்கிறார்கள்.

அப்போதுதான் தனக்கு வந்த மொபைல் அழைப்புகளும், செய்திகளும் உண்மையானவைதான் என்பது அவருக்கு புரிந்திருக்கிறது.

ஆம், ஓஷனுக்கு, 5 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான ஒரு வீடு பரிசாக கிடைத்துள்ளது. அவர் அந்த வீட்டில் வாழலாம், அல்லது அதை வாடகைக்கு விடலாம், அல்லது அதை விற்று கோடீஸ்வரியாகலாம்.

ஆனால், அவர் ஏன் வீட்டை விற்கபோகிறார், வீடு மட்டுமல்ல, கூடவே 100,000 பவுண்டுகள் ரொக்கமும் அவருக்கு பரிசாக கிடைத்துள்ளதே.

ஆனாலும், செவிலியர் படிப்பை நிறுத்தமாட்டேன், படித்து முடித்து செவிலியர் ஆவது என் நோக்கம் என்று கூறும் ஓஷன், செஷல்ஸிலுள்ள தன் உறவினர்களை எல்லாம் அழைத்து, அவர்களுக்கு வகை வகையாக சமைத்துப்போடப் போகிறேன் என்கிறார்.

வீடற்ற நிலைமைக்கு ஆளாகிவிடுவோமோ என்ற பயத்தில் இருந்த ஓஷன், இன்று கோடீஸ்வரியாகிவிட்டார். இதைவிட பெரிய கிறிஸ்துமஸ் பரிசே இருக்கமுடியாது என்கிறார் ஓஷன்!
 

Leave a comment

Comment