TamilsGuide

சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து புகையிரதத்துடன் மோதி விபத்து

களுத்துறை – வஸ்கடுவ பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையை கடக்கும் போது சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற சொகுசுப் பேருந்து ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாதில், மூவர் காயமடைந்துள்ளனர்.

குறித்த பேருந்தானது ஒரு ஹோட்டலில் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு மற்றொரு ஹோட்டலுக்கு செல்லும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பேருந்தில் பயணித்த சுற்றுலாப் பயணிகள் செக் குடியரசை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று இரவு 9 மணிக்கு நாட்டை விட்டுச் செல்ல வேண்டியிருந்த நிலையிலேயே, அளுத்கமவில் இருந்து சிலாபம் நோக்கி பயணித்த ரயிலுடன் இவர்கள் பயணித்த பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் பேருந்தின் சாரதிக்கும் இரண்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

விபத்து காரணமாக அளுத்கமையிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் ரயில் மாத்திரம் இரத்து செய்யப்பட்டிருந்தது.

விபத்தில் சிக்கிய ரயிலில் இருந்த பயணிகள், மருதானை நோக்கிச் செல்லும் மற்றொரு ரயிலில் சென்று தாங்கள் செல்ல வேண்டிய இடத்தை அடைந்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக வஸ்கடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a comment

Comment