TamilsGuide

கருப்பு வெள்ளி கொண்டாட்டத்தில் ஜோ பைடன் வாங்கிய புத்தகம்

அமெரிக்காவில் ஒவ்வொரு வருட நவம்பர் மாத 4-வது வியாழக்கிழமை, "தேங்க்ஸ்கிவிங் டே" (Thanksgiving Day) என கொண்டாடப்படுகிறது. நன்றி தெரிவிக்கும் நாள் என அங்கு கொண்டாடப்படும் இந்நாளில் அமெரிக்காவில் குடும்பங்கள் ஒன்று கூடி, ஒருவருக்கொருவர் நன்றி கூறி, விருந்துண்டு, விளையாடி, மகிழ்ச்சியாக இருப்பது வழக்கம்.

இதற்கு அடுத்த நாள் "ப்ளாக் ஃப்ரைடே" (Black Friday) எனப்படும். கருப்பு வெள்ளிக்கிழமை எனும் பெயரில் கொண்டாடப்படும் இந்நாள், டிசம்பர் மாத இறுதியில் வரும் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கான பொருட்கள் வாங்க தொடங்கும் தினமாக கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, கடைகளில் பல்வேறு பொருட்களை வாங்க கூட்டம் அலைமோதும். இதன் காரணமாக, வர்த்தகர்கள் அதிக தள்ளுபடி வழங்குவதும், பொருட்கள் வாங்குபவர்களுக்கு ஷாம்பெயின் உள்ளிட்ட பல பரிசு பொருட்களை அளிப்பதும் வழக்கம்.

இந்த வியாபார கொண்டாட்டம் ஆண்டு இறுதி வரை நடந்து, பின் புது வருட கொண்டாட்டங்களுக்கு பிறகு நிறைவடையும்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் (Massachusetts) மாநில தீவான நான்டுகெட் (Nantucket) பகுதியில், தன் குடும்பத்தினருடன் கோடீசுவரர் டேவிட் ரூபன்ஸ்டீன் என்பவருக்கு சொந்தமான பெரிய வீட்டில், விடுமுறையை கொண்டாடி வருகிறர். கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக குடும்பத்தினருடன் சாலைகளில் உள்ள அங்காடிகளில் பொருட்கள் வாங்க வந்தார்.

கருப்பு வெள்ளிக்காக கடைகளில் பொருட்கள் வாங்க சென்ற பைடன், ஹீதர் காக்ஸ் ரிச்சர்ட்ஸன் (Heather Cox Richardson) எனும் பெண் வரலாற்று ஆசிரியர் எழுதிய "ஜனநாயகத்தின் விழிப்பு" எனும் பொருள்படும் "டெமாக்ரஸி அவேகனிங்" (Democracy Awakening) புத்தகத்தை வாங்கினார்.

"எங்கள் குடும்ப வழக்கம் இது. கருப்பு தின கொண்டாட்டத்தின் போது ஒரு புத்தக கடைக்காவது சென்று புத்தகம் வாங்குவது எங்கள் குடும்ப வழக்கம்" என இது குறித்து பைடன் தெரிவித்தார்.

கடந்த வருடம் ஜோ பைடனை ஹீதர் பேட்டி கண்டதும், அதில் அவரை, "அமெரிக்க ஜனநாயகம் எனும் பண்டைய சித்தாந்தத்தை மீட்டு எடுக்கும் புரட்சிகரமான அமெரிக்க அதிபர்" என புகழ்ந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஜோ பைடனுடன் வந்திருந்த அவர் மனைவியும் அமெரிக்காவின் முதல் பெண்மணியுமான ஜில் பைடன், தங்கள் குடும்பம் விடுமுறையை மகிழ்ச்சியாக கொண்டாடி வருவதாக தெரிவித்தார்.

Leave a comment

Comment