TamilsGuide

எமது இனத்துக்காக போராடியவர்களின் சுவடுகள் அழிக்கப்படுவது மனவேதனைக்குரியது

”எமது இனத்துக்காக போராடியவர்களின் சுவடுகள் அழிக்கப்படுவது மனவேதனைக்குரியது” என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்டுவந்த நினைவு தூபிகள் அகற்றப்பட்டத்தை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றேன்.

அத்துடன் இதனை நான் மிகவும் துக்ககரமான சம்பவமாகக்  கருதுகின்றேன். ஓர் இனத்துக்காக இனத்தின் விடுதலைக்காக போராடிய வீரர்கள் துயிலும் இவ் இல்லங்களை அழிப்பது எமது சமூகத்துக்கு மிகவும் மன வேதனையளிப்பதாகும். அவர்களை பெற்றபெற்றோர்கள் மற்றும் சகோதரர்கள் உறவினர்கள் பிள்ளைகளின் மனநிலையை யோசித்துப் பாருங்கள்!

இந்நாட்டில் மக்களின் வரிகளை பெற்றுக்கொண்டு மாளிகைகளும் கோபுரங்களும் கட்டி வைத்துள்ள இராணுவ தளபதிகள் மற்றும் இராணுவ மேலதிகாரிகளின் பாதுகாப்புக்கென பாரிய நிதி செலவிடப்படுகின்றது.

இருப்பினும் இராணுவ சிப்பாய்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் யுத்தம் முடிந்த பின்னும் கோட்டாபய அவர்களினால் மேலதிகமாக இணைக்கப்பட்டு அவர்கள் மேசன், தச்சுத்தொழில் மற்றும் கூலி வேலைகளுக்க்காக அமர்த்தப்பட்டார்கள்.

இலங்கை மக்கள் அவர்களின் வேதனத்துக்கும் சேர்த்து தற்பொழுது பாரிய வரி செலுத்தும் நிலைமைக்கு தள்ளப்படுள்ளார்கள்.

இருப்பினும் இவர்களும் இவ் பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்படுள்ளனர். ஆனால் இவர்களின் தற்போதைய செயல்பாடுகள் ஆனது இன விரோதத்தை மென்மேலும் தூண்டும் விதமாகவும் அவமரியாதை செய்யும் விதமாகவும் அமைந்துள்ளது” இவ்வாறு  சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment