TamilsGuide

விசா கோரி 50 தொலைபேசி அழைப்பு மேற்கொண்டவர் கைது - மனநிலையை ஆராயவும் உத்தரவு

பிரான்ஸ் தூதரகத்திற்கு 50 முறை தொலைபேசி அழைப்புகளை செய்து அதன் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் நேற்று (21) உத்தரவிட்டுள்ளது.

குருந்துவத்தை பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கொட்டாஞ்சேனை கதிரேசன் தெருவைச் சேர்ந்த தவராஜ் சிங்கம் கிருஷ்ண குமார் என்ற சந்தேக நபரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டார்.

பிரான்ஸ் தூதரகத்தின் எலிசபெத் டெசன் செய்த முறைப்பாட்டின்படி, பிரான்ஸ் தூதரகத்திற்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து, அருகிலேயே தங்கி குற்றவியல் வற்புறுத்தல் மற்றும் துன்புறுத்தல்களை ஏற்படுத்தியதற்காக சம்பந்தப்பட்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்தனர்.

குருந்துவத்தை பொலிஸ் கான்ஸ்டபிள் (70900) உபாலி பண்டார, சம்பந்தப்பட்ட சந்தேகநபர் பிரான்ஸ் செல்ல விசா வழங்குமாறு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரான்ஸ் தூதரகத்தின் பணிகளுக்கு இடையூறு விளைவித்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

சந்தேகநபரை பிரான்ஸ் பொலிஸ் அதிகாரி எச்சரித்த போதிலும், தொடர்ந்த பிரச்சனை காரணமாக, முறைப்பாட்டாளர் சந்தேக நபருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார்.

சந்தேகநபரின் மனநிலை குறித்து மனநல மருத்துவரிடம் அறிக்கை பெறுமாறு சிறைச்சாலைக்கு தலைமை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
 

Leave a comment

Comment