TamilsGuide

ரஜினியை நேரில் சந்தித்த கார்த்திக் சுப்பராஜ்

'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. தீபாவளியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் இதுவரை ரூ.17 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல், 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவினரை பாராட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படம் ஒரு குறிஞ்சி மலர். கார்த்திக் சுப்புராஜின் அற்புத படைப்பு. இந்நாளின் திரையுலக நடிகவேன் எஸ்.ஜே.சூர்யா. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் வில்லத்தனம், நகைச்சுவை, குணச்சித்திரம் என மூன்றையும் கலந்து அசத்தியிருப்பதாக" என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படக்குழுவினர் நடிகர் ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், "ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படக்குழுவினர் மீது பொழிந்த அன்பிற்கு நன்றி தலைவா.. உங்களுடனான ஒரு மணி நேர உரையாடல் எங்கள் படக்குழுவினருக்கு நேர்மறையான எண்ணத்தை கொடுத்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a comment

Comment