TamilsGuide

ஒவ்வொரு தோட்டத் தொழிலாளர் குடும்பத்திற்கும் சொந்த நிலம் கிடைக்கும் – அமைச்சர் ஜீவன்

தோட்டத்தொழிலார்களுக்கு அரசாங்கம் இலவச காணிகளை வழங்குவதாக அறிவித்துள்ளமையை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமான் வரவேற்றுள்ளார்.

இதற்காக 4 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில், ஒவ்வொரு தோட்ட தொழிலார் குடும்பத்திற்கும் சொந்த நிலம் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் 2024 ஆம் ஆண்டிற்கான 10 பில்லியன் ஒதுக்கீட்டின் மூலம், மலையகத்தின் வாழ்க்கைத் தரம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

நுவரெலியா மாஸ்டர் டெவலப்மென்ட் திட்டத்தின் ஒரு பகுதியாக நுவரெலியாவில் புதிய பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படவுள்ளது என்றும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அத்தோடு கொத்மலையில் உள்ள காலநிலை மாற்ற பல்கலைக்கழகத்துடன் இணைந்து, நுவரெலியா மாவட்டத்தில் விரைவில் இரண்டு பல்கலைக்கழகங்கள் தொடங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

கண்டியில் அமைக்கப்படவுள்ள புதிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தோடு மத்திய மாகாணம் விரைவில் உயர்கல்வியின் மையமாக மாறும் என்றும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a comment

Comment