TamilsGuide

இந்திய அரசாங்கத்தினால் மலையகத்திற்கு வழங்கப்பட்ட நிதி குறித்து ஆராய விசேட குழு

மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்குவதற்காக பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவைக் குழு, பாதீட்டுக்கு முன்னர் அதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளது என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கல்வி, சுகாதாரம் உட்பட மலையக மேம்பாடுகள் தொடர்பிலும் பிரதமர் தலைமையிலான குழு கவனம் செலுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்குவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் பிரதமர் தலைமையில் அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் இந்திய அரசாங்கத்தினால் மலையக மேம்பாட்டுக்காக வழங்கப்பட்டுள்ள 3 ஆயிரம் மில்லியனில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் பற்றி ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஜீவன் தொண்டமான் மேலும் தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment