அமெரிக்காவில் மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தை பொருத்தப்பட்ட நபர் ஒருவர் 40 நாள்களுக்கு பிறகு உயிரிழந்தார். நவீனமான இந்த உலகில் மனிதர்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க பல பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில், அப்படிப்பட்ட பரிசோதனை முயற்சி ஒன்று நடந்துள்ளது.
அமெரிக்காவில், முன்னாள் கடற்படை வீரரான லாரன்ஸ் பேஸ்ட் (58) என்பவருக்கு இதயம் செயலிழந்துள்ளது. இவருக்கு, கடந்த செப்டம்பர் 20 -ம் திகதி மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தை அமெரிக்காவின் மேரிலாண்ட் மருத்துவ குழு வெற்றிகரமாக பொருத்தியது.
அறுவை சிகிச்சை செய்த பின்பு, குடும்பத்தினருடன் நேரம் செலவழிப்பது, உடற்பயிற்சி செய்வது, சீட்டுக்கட்டு விளையாடுவது போன்ற விடயங்களை லாரன்ஸ் செய்து வந்தார். இந்நிலையில், 6 வாரங்கள் பிழைத்த லாரன்ஸ் பேஸ்ட் கடந்த ஒக்டோபர் 30 -ம் திகதி உயிரிழந்தார்.
மருத்துவரின் முயற்சியால் 40 நாள்கள் வரை லாரண்ஸ் உயிர் பிழைத்தார் என மேரிலாண்ட் மருத்துவ குழு அறிக்கையில் கூறியுள்ளது.
மேரிலாண்ட் மருத்துவ குழு மனிதர்களுக்கு மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயத்தை மாற்றுவதில், இது இரண்டாவது சிகிச்சையாகும்.
கடந்த ஆண்டு 2022, ஜனவரி 7 -ம் திகதி முதல் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட டேவிட் பெனட் என்பவர் இரண்டு மாதங்கள் வரை உயிர் பிழைத்தது குறிப்பிடத்தக்கது.