TamilsGuide

மெய்நிகர் நிகழ்விற்கு உங்களை அன்புடன் அழைக்கின்றோம்

மலையக தமிழ் உறவுகள்  பிரித்தானியர்களால் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு தொழிலாளர்களாக கொண்டுவரப்பட்டு இந்த ஆண்டுடன் இருநூறு வருடங்கள் பூர்த்தியாகின்றது. இந்த இரண்டு நூற்றாண்டுகளில் அவர்களின் வாழ்வாதாரத்தில் கணிசமான முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.

இந்த சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கும் மலையை தமிழ் உறவுகளின் கல்விக்கு கரம்கொடுக்கும் நோக்குடன் வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை மெய்நிகர் இசை நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

மலையகத்தில் உள்ள அரச பாடசாலையான தெஹியோவிட்ட தமிழ் மகா வித்தியாலயத்தில் (Dehiowitta Tamil Maha Vidyalayam) விஞ்ஞான ஆய்வுகூடத்தை நிர்மாணிக்கும் உன்னதப் பணியை ஆதரிக்கும் முகமாக வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையினால் இந்த நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. நூற்றாண்டு கால வரலாற்றைக்கொண்ட இந்த பாடசாலை மண்சரிவினால் பாதிக்கப்பட்ட நிலையில் மாணவர்களின் கல்வி நடவடிக்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. அதுமட்டும் அல்லாமல் இங்குள்ள தமிழ் மாணவர்கள் உயர்தரத்தில் விஞ்ஞான மற்றும் கணித பாடங்களை தொடர்வதற்கான வசதிகள் இல்லாமல் காணப்படுவதால் தமிழ் மாணவர்கள் சிங்கள பாடசாலைகளில் சிங்கள மொழிக்கல்வியை தொடர்வதற்கு ஊக்குவிக்கப்படுகின்றார்கள். இந்த நிலையை மாற்றி சகல வசதிகளுடனும் கூடிய விஞ்ஞான ஆய்வுகூடத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதற்கு நிதிசேர்ப்பதற்காக நடத்தப்படும் இந்த மெய்நிகர் நிகழ்விற்கு உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

நிகழ்ச்சி விபரங்கள்
தேதி: 4 நவம்பர் 2023
நேரம்: 11:00 AM EST

பாடகி ஜெசிகா ஜூட் மற்றும் பாடகர்  ஜூட் சூசைதாசன் ஆகியோரின் இசை நிகழ்வுகளில் இணைந்துகொள்வதோடு இந்த நற்பணிக்கு உங்கள் ஆதரவை வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

இந்த இசை நிகழ்வை நீங்கள் வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவையின் வலையொளி பக்கத்திலும்  (youtube), முகப்புத்தகத்திலும் (facebook) பார்வையிடலாம்.

இந்த இசை நிகழ்வில் திரட்டப்படும் நிதி அனைத்தும் முழுமையாக தெஹியோவிட்ட தமிழ் மகா வித்தியாலயத்தின் விஞ்ஞான ஆய்வுகூடத்தை நிர்மாணிக்கும் பணிகளுக்காகவே செலவிடப்படும். உங்களின் பங்குபற்றல் ஒவ்வொரு தமிழ் மாணவனினதும் தமிழ் கற்கைகளுக்கான கனவிற்கு பாலமாக அமையும்.
தமிழால் இணைவோம்.

Leave a comment

Comment