TamilsGuide

இஸ்ரேலிலுள்ள இலங்கையர்களுக்கு விசா வழங்குவதற்கான விசேட வேலைத்திட்டம்

விசா அனுமதிப்பத்திரம் இன்றி இஸ்ரேலில் தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கு விசா வழங்குவதற்கான விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகத்தினால் இந்த செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விசா இன்றி சட்டவிரோதமான முறையில் இஸ்ரேலில் தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கு விசா வழங்கும் செயற்பாட்டுக்காக, அங்கிருக்கும் இலங்கையர்களின் தகவல்களை திரட்டும் வேலைத்திட்டம் நேற்று ஆரம்பமாகியுள்ளது.

இதற்கான பணிகள் இஸ்ரேலில் இருக்கும் இலங்கை தூதரகத்தில் இடம்பெறும் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் குடிவரவு குடியகல்வு பிரிவின் பணிப்பாளர் நாயகம் எயால் சிஸ்சோ உள்ளிட்ட அதிகாரிகள் சிலர் இலங்கை தூதரகத்துக்கு வந்து, தூதுவருடன் கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது விசா இல்லாமல் தாதியர் சேவையில் இருக்கும் ஊழியர்கள் மற்றும் ஏனைய பிரிவுகளில் இருக்கும் இலங்கையர்களுக்கு விசா அனுமதிப்பத்திரம் வழங்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு, விசா காலம் முடிவடைந்த பின்னரும் தொடர்ந்து இஸ்ரேலில் தங்கி இருக்கும் இலங்கையர்களின் விசா அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்குமாறு குடிவரவு குடியகல்வு பிரிவின் பணிப்பாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கோரிக்கைக்கு இஸ்ரேல் குடிவரவு குடியகல்வு பிரிவின் பணிப்பாளர் நாயகம் இணங்கியதாகவும் விசா இனுமதிப்பத்திரம் இல்லாமல் தங்கி இருக்கும் இலங்கையர்களின் தகவல்களை கோரியதாகவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறே விசா காலம் முடிவடைந்த பின்னரும் இஸ்ரேலில் தங்கி இருக்கும் இலங்கையர்களுக்கு விவசாய பிரிவில் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொடுப்பதற்கும் பணிப்பாளர் நாயகம் இணங்கியதாகவும் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

Leave a comment

Comment